
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்று உலகம் முழவதும் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக், பிக் பாஷ் லீக், எஸ்.ஏ20 என்று வெவ்வேறு பெயர்களில் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட் மீதான ஆர்வமும், ஈர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் டி20 தொடர் போன்று டி10 தொடரும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. அப்தாபி டி20 லீக், கத்தார் டி20 லீக், ஐரோப்பியா கிரிக்கெட் லீக், லங்கா டி10 லீக், ஆப்பிரிக்கா டி10 லீக், ஜிம் ஆப்ரோ டி10, யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் என்று உலகம் முழுவதும் டி10 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி10 லீக் தற்போது இந்தியாவிலும் நடக்க இருக்கிறது.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற பெயரில் இந்த டி10 லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த டி10 தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன. வரும் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரையில் ஒரு வாரம் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் இந்த தொடர் மும்பையில் நடக்கிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் ஒரு போட்டியில் மோதும். அதன்படி ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும். இதில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதி சுற்றிலும், 2 மற்றும் 3 ஆவது இடங்களில் உள்ள அணிகள் 2ஆவது தகுதி சுற்றிலும் மோதும்.
முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2ஆவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியானது முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2ஆவது தகுதிச் சுற்றில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரில் பங்கேற்கும் அணியை சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூர் அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷர் குமார், ஹைதராபாத் அணியை ராம்சரணும், சென்னை அணியை நடிகர் சூர்யாவும் வாங்கியுள்ளனர். கொல்கத்தா அணியை யாரும் வாங்கவில்லை.
பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலார் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் (ஐஎஸ்பிஎல்) முக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர் ஆவார். சமீபத்திய அறிக்கையில், அங்கீகரிக்கப்படாத திறமையாளர்களுக்கு ஒரு பெரிய மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க தளத்தை வழங்குவதை ISPL நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரரும் ரவி சாஸ்திரி, ஐஎஸ்பிஎல் தொடரின் தலைமை வழிகாட்டியாக இணைந்துள்ளார். ஐ.எஸ்.பி.எல் பலரின் கிரிக்கெட் கனவுகளை ஒரு பெரிய மேடையில் செழிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த உற்சாகமான முயற்சியில் இருந்து வெளிவரும் வெற்றிக் கதைகளை நான் எதிர்நோக்குகிறேன்," என்று சாஸ்திரி கூறினார்.
இந்த தொடரில் பங்கேற்க விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் https://www.ispl-t10.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த டி10 தொடரானது டென்னிஸ் பந்துகள் கொண்டு நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது