அருகம்புல் தூய்மை, எளிமை மற்றும் இயற்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்கு பின்னால் அனலாசுரன் என்ற அசுரனைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.
அனலாசுரன் என்ற அசுரன் தனது உடலில் இருந்து கடுமையான வெப்பத்தை கக்கி தேவர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைவரையும் துன்புறுத்தியதாக புராணக் கதை கூறுகிறது. இதனால் கவலை அடைந்த தேவர்கள் விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனை எதிர்த்து போரிட்டார்.
ஆனால், விநாயகர் ஏவிய அனைத்து பொருள்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். அவனை அடக்குவதற்காக விநாயகர் அவனை விழுங்கியதாகவும், இதனால் விநாயகரின் உடலுக்குள் கடுமையான வெப்பம் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
அப்போது தேவர்கள் பல்வேறு வழிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்த முயன்றும் பலன் கிடைக்கவில்லையாம். இதனால், தேவர்கள் காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். இதில், முனிவர் அருகம்புல் விநாயகரின் மீது வைத்தார். உடனே விநாயகர் உடலின் வெப்பம் தணிந்து அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக புராணம் கூறுகிறது. இதனால் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றதாக நம்பப்படுகிறது.