Trichy Mayana Kollai 2026 : திருச்சியில் அமைந்துள்ள பூக்குளம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருச்சி மாநகரின் மையப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்துள்ளது பூக்குளம் அங்காள பரமேஸ்வரி ஆலயம். இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகும். இங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களையும், பிள்ளை வரம் இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் அளிக்கும் அன்னையாகவும் வணங்கப்படுகிறார். இங்கு நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழா மிகவும் விசேஷமானதாகும். மகா சிவராத்திரி தொடங்கி சுமார் பத்து நாட்கள் விழா களைகட்டும்.
25
திருச்சி மயானக் கொள்ளை 2026
மகா சிவராத்திரி மற்றும் அதை ஒட்டி நடக்கும் மயானக் கொள்ளை இந்த கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க அன்னை அங்காளம்மன் விஸ்வரூபம் எடுத்து மயானத்தில் ஆடிய ஆட்டமே மயானக் கொள்ளை விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரிநின் மூன்றாவது நாள் இந்த கோயிலில் மயானக் கொள்ளை நடைபெறும். ‘கொள்ளை’ என்பது இங்கே அள்ளித் தருவதை குறிக்கும். பக்தர்களின் கர்ம வினைகளையும், தீய சக்திகளையும் அழித்து, அவர்களுக்கு அன்னை நல்வாழ்வை அள்ளித் தருவதை இது குறிக்கிறது.
35
ருத்ர பூமியில் அஸ்தி பூஜை
திருவிழாவின் முக்கிய விழாவான மயானக் கொள்ளை அல்லது ருத்ர பூமியில் அஸ்தி பூஜை என்னும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. கோயிலின் முக்கிய பரிவார தெய்வங்களான அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், மதுரை வீரன், கருப்பண்ண சுவாமி, இருளப்பசாமி, ராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புஷ்ப அலங்கார அருங்காட்சியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது. இரவு 10:30 மணிக்கு கோயிலின் பரம்பரை பூசாரியான ராஜேந்திரன் பேச்சியம்மன் வேடம் தரித்து, கையில் சூலாயுதம் ஏந்தி கோவிலிலிருந்து காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஓயாமரி சுடுகாட்டிற்கு மேளதாளங்கள் முழங்க செல்வார்.
பெரிய கடைவீதி, என்.எஸ்.பி ரோடு, நந்தி கோயில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டை அடைவார்கள். அங்கு கோயில் கொண்டிருக்கும் அரிச்சந்திர மகாராஜா மற்றும் பைரவர் ஆகியோருக்கு மகா தீபாரதனைகள் நடைபெற்ற பிறகு எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து மருளாளி சாப்பிடுவார். பின்னர் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் எலும்புகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார். பின்னர் சாம்பலை எடுத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார். இது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பதும், செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை.
55
சாதி மத வேறுபாடு இன்றி நடக்கும் விழா
அம்மன் வேடமிட்ட மருளாளி வரும் வழியெங்கும் அவருக்கு மாலைகள் அணிவித்தும், நைவேத்யங்கள் வழங்கியும் மக்கள் வழிபடுவார்கள். மயானக் கொள்ளை முடிந்து மீண்டும் கோயிலை நோக்கி வரும் வழியில் பக்தர்களின் பூஜைகளையும், அவர்கள் வழங்கும் காணிக்கைகள் மற்றும் பிரசாதங்களையும் ஏற்றுக்கொண்டு மருளாளியை கோவில் திரும்புவார். திருச்சியில் நடைபெறும் இந்த திருவிழா சாதி மத வேறுபாடு இன்றி, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் விழாவாக இருக்கிறது. இது வெறும் வழிபாடாக மட்டுமின்றி அந்த பகுதி மக்களின் கலாச்சார அடையாளமாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்குகிறது.