
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் என்கிற பகுதியில் பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை பிடிக்கச் சென்ற பொழுது, அதன் தலையில் இருந்து படிகம் போன்ற ஒரு பொருள் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பொருள் பிளாஸ்டிக் போல தோன்றினாலும், அப்பகுதி மக்கள் அதை நாகமணி என்று நம்புகின்றனர். இதன் காரணமாக அந்த நாகமணியை பார்க்கவும், அதை வழிபடவும் அந்த பகுதியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து நாகமணி என்று ஒன்று உள்ளதா? இந்து புராணங்கள் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்து மத மரபுகளில் நாகங்கள் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறது. நாகமணி குறித்த ஏராளமான குறிப்புகள் இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற கதைகளில் காரணப்படுகின்றன. மகாபாரதம், கருட புராணம் போன்ற நூல்களில் நாகலோகம் பற்றியும், அங்கு நாகராஜாக்களின் தலைகளில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாகமணிகள் இரவில் பிரகாசமாக ஒளிரும் என்றும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு அளவற்ற செல்வ செழிப்பும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், எதிரிகளை வெல்லும் சக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே இந்த நாகமணிகளை எடுப்பதற்காக சிலர் நாகங்களை கொல்லும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து மதத்தின் கூற்றுகளின் படி நாகங்கள் தாமாக வந்து சிலருக்கு நாகமணிகளை வழங்குமென்றும், சில சமயங்களில் கோபமடைந்த நாகங்கள் நாகமணிகளை தாமாக உமிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் கல் போன்ற பொருள் இருப்பதற்காகவோ அல்லது நாகமணி இருப்பதற்காகவோ எந்தவித ஆதாரமும் இல்லை. உயிரியலாளர்கள், விஞ்ஞானிகள் ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நாகமணி குறித்த தகவல்களை முழுமையாக மறுக்கின்றனர். பாம்புக்கு தலையில் கல்போன்ற பொருளை சுமக்கும் அம்சமோ அல்லது கல்லை வெளியிடும் அம்சங்களோ இல்லை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
மற்ற உயிரினங்களைப் போலவே பாம்புகளின் உடலும் செதில்கள், எலும்புகள், தசைகள் மற்றும் பிற உறுப்புகளைக் கொண்டவை. அவற்றின் தலைப்பகுதியில் ரத்தினங்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் பாம்புகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து பளபளப்பான கற்கள் அல்லது கண்ணாடி துண்டுகளை சுமந்து வந்திருக்கலாம், தவறுதலாக அவை கீழே விழும் பொழுது அதை நாகமணியாக கருதி இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒளிரும் பண்புகளைக் கொண்ட சில தாதுக்கள் அல்லது பாறைகள் இரவில் வெளிச்சத்தை பிரதிபலிக்க கூடும். இது போன்ற இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளில் தாதுக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது அது நாகமணி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.
நாகமணி குறித்து பல கட்டுக்கதைகள் நம் நாட்டில் நிலவுகின்றன. நாகமணி இருப்பதாக கூறி பல மோசடிகளும் நடைபெற்றிருக்கின்றன. ஒளிரும் தன்மையுள்ள, இரசாயனம் பூசப்பட்ட கற்கள் அல்லது செயற்கையான கற்களை நாகமணி என்று கூறி பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி நாகமணி என்கிற ஒரு பொருள் உண்மையில் கிடையாது. பீகாரில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அது பல வழிகளில் விளக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்து ஆழமாக வேரூன்றிய பயம் மற்றும் நாகமணி குறித்த நம்பிக்கை இதுபோன்ற சம்பவங்களை உண்மை என நம்ப வைக்கிறது.
பாம்பு அசைந்த பொழுது அதன் அருகில் இருந்த பளபளப்பான பொருள் தற்செயலாக கீழே விழுந்து இருக்கலாம். அது பாம்பு தலையிலிருந்து விழுவது போல தோன்றி இருக்கலாம் அல்லது மண்ணில் புதைந்த ஒரு சாதாரண கல் அல்லது கனிமம் பாம்பின் அசைவால் வெளிப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் பரபரப்பு அல்லது வைரலுக்காக இதுபோன்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதை வைத்து மோசடி செய்யும் எண்ணமும் சிலருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக நாகமணி ஒரு கற்பனையான விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
பீகாரில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இது தற்செயலான நிகழ்வின் புரிதலாக இருக்கலாம். இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளை பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டியது அவசியம். எந்த ஒரு நம்பத்தகாத விஷயத்தையும் ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது, தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கும், மோசடிகள் நிகழாமல் இருப்பதற்கும் உதவும்.