Ayyappa Temples: சபரிமலை வழியில்.. தென்காசி பக்கத்துல இந்த 3 அதிசய ஐயப்பன் கோயில்களை மிஸ் பண்ணிடாதீங்க!

Published : Jun 16, 2026, 09:08 AM IST

Ayyappa Temples: சபரிமலை செல்லும் வழியில் தென்காசி அருகே உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது? தரிசன நேரம் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆனி மாத (மிதுன மாசம்) மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜூன் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. ஜூன் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

ச‌பரிமலை செல்லும் பக்தர்கள் வழியில் உள்ள மற்ற முக்கிய சாஸ்தா ஆலயங்களையும் தரிசிக்க தவறுவதில்லை. அந்த வகையில் தென்காசி மற்றும் செங்கோட்டை வழியாகக் கேரளா செல்லும் மலைப்பாதையில், அடர்ந்த காடுகளுக்கும் இயற்கை எழிலுக்கும் மத்தியில் அமைந்துள்ள 3 வரலாற்றுச் சிறப்புமிக்க ஐயப்பன் கோயில்கள் குறித்து இந்தத் பதிவில் விரிவாக காண்போம்.

24
அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஆலயம் (கல்யாண சாஸ்தா)

தென்காசியில் இருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில், கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சுவாமி 'வனராஜனாக' கம்பீர அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது கைகளில் அமுதமும், காந்தமலை வாளும் இருப்பது தனிச்சிறப்பாகும்.

கோயிலின் சிறப்பு: திருமணத் தடைகள் உள்ளவர்கள் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள தர்மசாஸ்தாவை மனமுருகி வழிபட்டால், விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் இவரை 'கல்யாண சாஸ்தா' என்றும் அழைக்கிறார்கள். பசுமையான மலைப்பாதையின் வழியே இந்த கோயிலுக்குப் பயணிப்பதே தனிப் புத்துணர்ச்சியைத் தரும்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினசரி அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மீண்டும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

செல்லும் வழி: தென்காசியில் இருந்து செங்கோட்டை, பண்பொழி மற்றும் மேக்கரை வழியாக இந்த மலைக்கோயிலை அடையலாம். செங்கோட்டையிலிருந்து கேரள அரசுப் பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.

34
குளத்துப்புழா பால சாஸ்தா திருக்கோயில்

தென்காசியில் இருந்து புனலூர் செல்லும் வழியில் சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் குளத்துப்புழா அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன், தனது குழந்தை வடிவில் வீற்றிருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலின் சிறப்பு: மழலைச் செல்வம் இல்லாத தம்பதியினர் இங்கு வந்து குழந்தைப் பேறு வேண்டி பிராத்தித்தால், நிச்சயம் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம். இக்கோயிலின் அருகிலேயே 'கல்லடா ஆறு' ஓடுகிறது. இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்குப் பொரி போடுவது இத்தலத்தின் முக்கிய வேண்டுதலாகக் கருதப்படுகிறது. ஆற்றில் நீராடிவிட்டு ஐயப்பனைத் தரிசிப்பது மனதிற்கு மிகுந்த அமைதியைத் தரும்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினசரி அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மீண்டும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

செல்லும் வழி: தென்காசியில் இருந்து செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை வழியாகக் குளத்துப்புழாவை அடையலாம். தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசுப் பேருந்துகள் அனைத்தும் குளத்துப்புழா வழியாகவே செல்லும்.

44
ஆரியங்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் (புஷ்கலை சமேத சாஸ்தா)

தென்காசியில் இருந்து வெறும் 22 கிலோமீட்டர் தொலைவில், சபரிமலை செல்லும் முக்கிய நெடுஞ்சாலையிலேயே ஆரியங்காவு ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மற்ற இடங்களில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கு மட்டும் 'புஷ்கலை' என்ற தேவியை மணம் முடித்த கோலத்தில், அதாவது குடும்பஸ்தராகக் காட்சி தருகிறார்.

கோயிலின் சிறப்பு: கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும், தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ளதால் இக்கோயிலில் தமிழ்நாட்டின் ஆகம முறைப்படியே பூஜைகள் மற்றும் சடங்குகள் நடத்தப்படுகின்றன. சென்னை மற்றும் மதுரையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் ஆரியங்காவு ரயில் நிலையம் வழியாகச் செல்வதால், பக்தர்கள் எளிதாக இங்கு வந்து செல்ல முடியும்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினசரி அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மீண்டும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

செல்லும் வழி: தென்காசியில் இருந்து செங்கோட்டை, புளியறை சோதனைச் சாவடி வழியாக மிக எளிதாக ஆரியங்காவை அடையலாம். தென்காசி பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கேரளா செல்லும் பேருந்துகள் இக்கோயில் வாசல் வழியாகவே செல்கின்றன. கேரள அரசு பேருந்துகள், தமிழக அரசு பேருந்துகள் என இரண்டும் உண்டு.

Read more Photos on
click me!

Recommended Stories