
ராமேஸ்வரம் கடல் பகுதியில் திதி கொடுக்க வரும் பக்தர்கள் தண்ணீரில் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்குள் இறங்கி சேகரித்து, அதன் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார் கருணாஸ். பெரிய கனவுகள் எதுவும் இல்லாமல், கிடைக்கும் வருமானத்தில் நிம்மதியாக வாழும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஒருநாள் வழக்கம்போல் கடலுக்குள் சென்று காசுகளைத் தேடும் போது, அவரது கைகளில் விலை உயர்ந்த ஆபரணம் ஒன்று சிக்குகிறது. அதை தனக்கென வைத்துக்கொள்ளாமல் காவல் துறையிடம் நேர்மையாக ஒப்படைக்கிறார். ஆனால், அவரது நேர்மையே பின்னர் அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
தான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாகக் கருதப்படும் சூழலுக்குள் கருணாஸ் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் சட்டரீதியான சிக்கல்கள், குடும்பத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து அவர் மீண்டு வருகிறாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
Sardar 2 Review : கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா... சர்தார் 2 மிஷன் வெற்றியா? தோல்வியா? விமர்சனம் இதோ
சமூகத்தில் சாதாரண மனிதன் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ முயற்சிக்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை ‘என்ன விலை’ பேசுகிறது. குறிப்பாக, எந்தத் தவறும் செய்யாத ஒருவர் ஒரு குற்றத்தின் பழியைச் சுமக்க நேர்ந்தால் அவரது வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஜீவ் பழூர்.
குடும்பம், வேலை என தன் வாழ்க்கையை அமைதியாக நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் திடீரென குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிலையை கருணாஸ் தனது நடிப்பின் மூலம் நம்பும்படியாகக் கொண்டு வந்துள்ளார். அவரது உடல்மொழியும் வசனங்களை வெளிப்படுத்தும் விதமும் கதாபாத்திரத்தின் மன அழுத்தத்தை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணரச் செய்கின்றன. இதுவரை அவர் ஏற்றிராத வகையிலான ஒரு கதாபாத்திரப் பரிமாணத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.
படத்தில் நிமிஷா சஜயன் ஏற்றுள்ள காஞ்சனா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் கதையின் மற்றொரு முக்கிய அம்சமாக உள்ளது. கருணாஸின் கதாபாத்திரத்துக்காக நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார்.
ஒரு தனிநபருக்கு இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் அநீதிக்கு எதிராக சட்டத்தின் உதவியுடன் நியாயத்தைப் பெற அவர் போராடும் தருணங்கள் கதைக்கு உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
விஜயலட்சுமி வீரமணி, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
கதையின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும், கடலை மையமாகக் கொண்ட காட்சிகளுக்கும் சாம் சி.எஸ். அமைத்துள்ள பின்னணி இசை பொருத்தமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கதையின் அழுத்தமான பகுதிகளில் இசை காட்சிகளின் உணர்வை அதிகரிக்கிறது.
ராமேஸ்வரம் பகுதியின் கடல், இயற்கைச் சூழல் மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி அழகாகப் பதிவு செய்துள்ளார். கடலை வெறும் பின்னணியாக பயன்படுத்தாமல், கதையின் சூழலோடு இணைத்து காட்சிப்படுத்தியிருப்பது கவனம் பெறுகிறது.
மொத்தத்தில் ஒரு சாதாரண மனிதன் நேர்மையாக இருப்பதற்கும், தனது உண்மையை நிரூபிப்பதற்கும் எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தை மையமாகக் கொண்ட படமாக ‘என்ன விலை’ அமைந்துள்ளது. “உண்மைக்கும் நேர்மைக்கும் இந்த சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு என்ன?” என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் விட்டுச் செல்கிறது இப்படம்.
Mandaadi Review : சூரியின் மண்டாடி சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ