தவெகவின் கட்டளைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் தலா ரூ.5 கோடி தொகையை வைப்புத் தொகையாக கட்சித் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
தவெக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் வேகம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் நிதியியல் நடைமுறைகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தயார் செய்து, அவர்களை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விஜய் திட்டமிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதற்காகப் பனையூர் அலுவலகத்திற்குப் பல நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், கள நிலவரப்படி விஜய் இதுவரை சுமார் 10 பேரை மட்டுமே நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நேர்காணலின் போது விஜய் வேட்பாளர்களிடம் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால், ''"கட்சி என்ன சொல்லுதோ அதை அப்படியே செய்யுங்க. திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பார்கள். அதற்கு இணையாக நீங்களும் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று மட்டும் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இது புதுமுக வேட்பாளர்கள் மத்தியில் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
24
ரூ. 5 கோடி நிபந்தனை
தவெகவின் கட்டளைப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் தலா ரூ.5 கோடி தொகையை வைப்புத் தொகையாக கட்சித் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் தேர்தல் செலவுகள், கட்டமைப்பிற்காக இந்தத் தொகை கேட்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆனாலும், முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில், 20 பேர் கூட இந்தப் பெருந்தொகையைக் கட்டுவதற்கு இதுவரை உறுதி அளிக்கவில்லை என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதே தவெகவிற்கு ஒரு சவாலாக இருக்கும் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை நிபந்தனையாக விதிப்பது தகுதியான பலரைத் தயங்க வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
34
வில்லிவாக்கம் - பெரம்பூர்: ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பு
விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தேர்தல் வேலைகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அல்லது தொண்டர்கள் தங்களது சொந்தப் பணத்தை ஒரு பைசா கூட செலவழிக்கத் தேவையில்லை எனத் தேர்தல் மேலாண்மைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தத் தொகுதிகளின் தினசரி தேர்தல் செலவுகள், விளம்பரங்கள் மற்றும் இதர பணிகளுக்கான முழுச் செலவுகளையும் ஆதவ் அர்ஜுனாவே ஏற்றுக் கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ளார். விஜய்யின் வெற்றியை உறுதி செய்ய இந்தத் தொகுதிகளில் எவ்வித நிதித் தட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது.
ஒருபுறம் சிபிஐ சம்மன், தணிக்கை குழுப் பிரச்சனைகள் என வெளிப்புற அழுத்தங்கள் இருந்தாலும், மறுபுறம் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு மற்றும் நிதி மேலாண்மை விஜய்க்குப் பெரும் சவாலாகவே உள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக, அதிமுக எனும் மாபெரும் சக்திகளை எதிர்க்கத் தேவையான நிதியையும், மனித வளத்தையும் விஜய் எப்படித் திரட்டப் போகிறார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
பணம் செலவழிக்கத் தயாராக இருக்கும் செல்வந்தர்களைத் தேடுவதா அல்லது கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்களுக்கு வாய்ப்பளிப்பதா என்கிற குழப்பத்தில் தவெகவின் முதற்கட்டப் பட்டியல் இன்னும் முழுமை பெறாமல் நீண்டு கொண்டே போகிறது.