
சமீப காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், முதல்வர் விஜய்யை மாநில அரசியலைத் தாண்டி, 2029-ல் தேசிய அரசியலுக்கு முன்னிறுத்தும் வகையில் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதமாக உருவாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து எதிர்வினைகள் வந்திருப்பது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், “2029-ல் பிரதமர் வேட்பாளர் விஜய்தான்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷிடம், 2029 மக்களவைத் தேர்தல் மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “2029-ல் பிரதமர் வேட்பாளர் தளபதிதான்.2026 தேர்தலில் என்ன நடந்தது என்பதை நாடே பார்த்தது. 2029-ல் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யாது. தமிழ்நாட்டில் இருந்துதான் முடிவு செய்யப்படும். இந்திய அரசியலில் பெரிய மாற்றம் 2029-ல் நிச்சயம் நிகழும்” என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுமா? என்ற கேள்விக்கு, “2029-ல் காங்கிரஸ் தவெக கூட்டணியில் தொடருமா? அல்லது விலகுமா என்பது அப்போது தான் தெரியும். விஜய்யை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அதேபோல், 2029-லும் ராகுல் காந்தி விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்” என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளது அரசியல் விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
தவெக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், “வடஇந்திய மக்களும் விஜய்யை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவை வழிநடத்தக்கூடிய தேசியத் தலைவராக விஜய் உருவெடுப்பார்” என்ற கருத்தை முன்வைத்திருந்தார். தொடர்ந்து, தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரியும் “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்” என்று கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து, விஜய்யை 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிறுத்துகிறதா? என்று தமிழக அரசியலில் விவாதமாக எழுந்தது.
தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுக்கு மாறுபட்ட கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் விஜய் தலைமையிலான தமிழக ஆட்சியில் தொடர்வது, மறுபுறம் 2029-க்கு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்ற இரட்டை அரசியல் நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையிலிருந்து விலகுவோம்
காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன், “ 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார், “விஜய்க்கு பதிலாக ராகுல் காந்தியை 2029 பிரதமர் வேட்பாளராக தவெக ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் தானும், அமைச்சர் விஸ்வநாதனும் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், ஒரே கூட்டணிக்குள் விஜய்யா? ராகுலா? என்ற பிரதமர் வேட்பாளர் விவகாரம் வெளிப்படையாக உருவெடுத்துள்ளது.
விஜய் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு நெருக்கமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு மாற்று இல்லை” என்றும், விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணிக்குள் விஜய்–ராகுல் விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாடு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “விஜய் பிரதமர்” என்ற பேச்சை விமர்சித்து, அரசியல் கற்பனைக்கு எல்லையே இல்லை என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “விஜய் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராகக்கூட ஆகலாம் என்று கிண்டல் தொனியில் விமர்சித்துள்ளார்.
விஜய்யின் தேசிய அரசியல் குறித்த பேச்சு தவெக–காங்கிரஸ் கூட்டணிக்குள் மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாதத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சமீபத்திய India Today–CVoter Mood of the Nation கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில், பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், விஜய் 9.2 சதவீதம் ஆதரவைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
கூட்டணி என்ன ஆகும்?
ஒருபுறம் விஜய்யை 2029 பிரதமர் வேட்பாளராக தவெக நிர்வாகிகள் முன்னிறுத்துகின்றனர். மறுபுறம், அதே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், ராகுல் காந்தியே தங்களது பிரதமர் வேட்பாளர் என்று தொடர்ந்து அறிவித்து வருகிறது.
ராகுல் காந்தியை 2029 பிரதமர் வேட்பாளராக தவெக ஆதரிக்கவில்லை என்றால் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் தவெக கூட்டணியில் இருந்து விலகுவாதாக அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார், எச்சரிக்கை விடுத்தும், 2029-ல் ராகுல் காந்தியே விஜயின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்று தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.