
தேமுதிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்டதில் பேசிய அவர், “நான் மட்டும் அல்ல. பாஜகவும் தேமுதிகவை நம் கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அமமுகவோடு சேர்ந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டார்கள். அவர்கள் வாங்கிய ஓட்டுகள் சொற்பமானது. என்றாலும் பல்வேறு தொகுதிகளில் 500 முதல் 4,000, 4,500 இப்படி மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக வாங்கிய வாக்கும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் 75 இடங்களை பிடித்தோம். உள்ளபடியே இன்னும் சில கட்சிகள் இருந்திருந்தால் நாம் வெற்றிபெற்று இருக்கலாம். தேமுதிகவிடம் டெல்லியில் இருந்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தேமுதிக வரும். அவர்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அதெல்லாம் நாம் செய்து கொடுத்து, அவர்களை இந்த அணிக்கு அழைத்து வந்து விடுவோம். நம்பிக்கையாக இருங்கள் என்று தலைமைக் கழக நிர்வாகிகளிடம் எடப்படி பழனிசாமி பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, வட மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை அழைத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பற்றியும் எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதாவது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இப்போது பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் சட்டமன்றத்தில் நடக்கிற அனைத்து கூட்டத்தொடர்களிலும் திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தபோதும் அவர் முக்கியமான தன்னுடைய சட்டமன்ற தொகுதி பிரச்சினையாக இருக்கட்டும், அல்லது மாநில உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கட்டும், முக்கியமான பல விஷயங்களில் உரிமைக்குரலாக அவர் முழங்கி இருக்கிறார்.
அந்த வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல அமைச்சர்களோடு அவர் நேருக்கு நேர் மோதி இருக்கிறார். மூத்த அமைச்சர் துரைமுருகனோடும் வேல்முருகன் சட்டமன்றத்திலே சற்று கோபமாக சில வார்த்தைகள் எல்லாம் பேசியிருக்கிறார். நடந்து முடிந்த இந்த சட்டமன்ற கூட்டத்த தொடரில் போக்குவரத்து கழகம் என்று தானே இருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று ஏன் இல்லை? என்ற பிரச்சனையை வேல்முருகன் எழுப்பினார். அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு விளக்கம் அளித்தார். அது பற்றியும் சட்டமன்றத்துக்கு வெளியே வந்து சற்று விமர்சன அடிப்படையில்தான் வேல்முருகன் பேசியிருந்தார்.
அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னபோது ‘‘நாங்கள் இப்போதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். முதலமைச்சர் அழைத்துப் பேசி எங்களுக்குரிய இடங்கள் என்ன? என்பதை முடிவு செய்வார் என்று சட்டமன்ற வளாகத்தில் பேசி இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது? எந்தெந்த சில இடத்தில் அவர்களுக்கு பலம் இருக்கிறது என்பது பற்றி விவாதித்து இருக்கிறார். இதுகுறித்து நாம் விசாரித்தபோது வேல்முருகன் தொடர்ந்து திமுகவுடன் ஒரு தோழமை சுட்டுதல் என்ற அடிப்படையிலும், கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் சில முரண்பாடுகளை நேருக்கு நேராக அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று சென்னையில் ஒவ்வொரு மண்டலத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார் வேல்முருகன்.
நேற்று வட மாவட்டங்களைச் சேர்ந்த அவருடைய கட்சி நிர்வாகிகள் அந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்கள். அவர்களிடம் வரும் சட்டமன்றத் தேர்தல் பற்றி வேல்முருகன் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டபோது ‘‘திமுக கூட்டணியில் உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. உங்கள் கட்சியை சேர்ந்த எங்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை. வரப்போகிற இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் ஏன் அதிமுகவோடு கூட்டணி வைக்கக் கூடாது? அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறது என்பது வேறு விஷயம். நாம் பாஜகவை தீவிரமாக எதிர்க்கிறோம். பல்வேறு விஷயங்களில் பாஜகவை எதிர்த்துதான் நாம் அரசியல் செய்து வருகிறோம். ஆனால் திமுக நாம் கேட்ட தொகுதியை இந்த தேர்தலில் கொடுக்குமா? கேட்ட இடங்களை கொடுக்குமா? கேட்ட நம்பர்களை கொடுக்குமா? என்றெல்லாம் ஒரு பெரிய கேள்வி இருக்கிறது.
அதனால், என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்தாலும், நாம் அதிமுகவை மட்டும் ஆதரிக்கலாமே. ஏனென்றால் திமுக, அதிமுக என்ற அளவுகோலின்படி பாஜக கட்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாடு எடுக்கலாமே என்றெல்லாம் அந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு வேல்முருகனனோ ‘‘இன்னும் திமுக தலைமை நம்மிடம் மட்டுமல்ல, எந்த கூட்டணி கட்சியிடமும் முறைப்படியான பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கவில்லை. அதனால் அதெல்லாம் ஆரம்பிக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்திருக்கிறார்.
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்று ஏற்கனவே சில ஆய்வுகளை நடத்திவிட்டு வட மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுக மாவட்ட செயலாளரிடம் இது பற்றி விசாரித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை வேல்முருகனிடம் அவரது கட்சி நிர்வாகிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நடக்குமோ? என்ற ஒரு எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது. அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு தேமுதிக மட்டுமல்ல தமிழக வாழ்வுரிமை கட்சியும் நம்முடைய அணிக்கு வந்தாலும் வரலாம் என்ற நம்பிக்கையை அதிமுகவினர் மத்தியில் நாம் பார்க்க முடிகிறது.