சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை..! சிங்கப்பூர் உள்துறை அமைச்சருக்கு உறுதி அளித்த ஸ்டாலின்

First Published May 25, 2023, 9:24 AM IST

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை விடுத்த நிலையில்,  இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும்,

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலிட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 23 ஆம் தேதி  சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரில் முதல் நாளிலேயே அசத்திய ஸ்டாலின்..! 6 நிறுவனங்களோடு புரிந்துணவு ஒப்பந்தம் போட்டு அதிரடி
 

இதனையடுத்து  நேற்று (24.5.2023) சிங்கப்பூரில்  Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  எஸ். ஈஸ்வரன் அவர்களையும் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும்,

புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று (25.5.2023)  சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்களை சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது அமைச்சர்  சண்முகம், கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை (Methodology for Assessing Procurement Systems) முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள்,

சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல், மாநில நிறுவனங்களுக்கான
இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சருடன் உரையாடினார்.

மேலும் சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை நொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சிந்திப்பிற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் செல்லவுள்ளார். 

இதையும் படியுங்கள்

தந்தை பெயரை சொல்லி உடன்பிறந்த அண்ணனையே விரட்டி அடித்தவர் ஸ்டாலின்.. தங்கம் தென்னரசை விளாசிய ஜெயக்குமார்.!

click me!