1982-ல் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 'நீதி கேட்டு நெடும் பயணம்' மேற்கொண்டார். மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை 200 கி.மீ தூரம் நடந்த இந்த நடைபயணம், அன்றைய எம்.ஜி.ஆர் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு உண்டென்றால் அது 1982-ல் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட 'நீதி கேட்டு நெடும் பயணம்' தான். ஒரு நேர்மையான அரசு அதிகாரியின் மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரையில் தொடங்கி திருச்செந்தூர் வரை 200 கி.மீ தூரம் கலைஞர் நடந்த அந்த நடைபயணம், அன்றைய எம்.ஜி.ஆர் அரசுக்கு சொல்லொணா நெருக்கடியை ஏற்படுத்தியது.
26
மர்ம மரணமும்.. மறைக்கப்பட்ட உண்மையும்..!
1980 நவம்பர் 26-ம் தேதி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பு கூறினாலும், கோயில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி பால் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டும், அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.
36
அறிக்கையை வெளியிட்ட கலைஞரின் அதிரடி!
அரசு மறைக்க முயன்ற அந்த 288 பக்க அறிக்கையின் நகலை, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார். அதில், அது தற்கொலை அல்ல, கொலை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. "அறிக்கை கலைஞரின் கைக்கு எப்படி கிடைத்தது?" என்று தமிழக அரசியலே திகைத்து நின்றது. அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்கியது.
200 கி.மீ நெடும்பயணம்: கொப்பளித்த கால்கள்.. குலையாத உறுதி!
கொலையாளிகளைக் கைது செய்ய 1982 பிப்ரவரி 15 வரை காலக்கெடு விதித்தார் கலைஞர். அரசு அசையாததால், திட்டமிட்டபடி மதுரையில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணத்தைத் தொடங்கினார்.
8 நாட்கள் இடைவிடாத பயணம்.
200 கி.மீ தூரம் வெயிலிலும், மழையிலும் நடைபயணம்.
கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்ட போதும், கட்டுப் போட்டுக்கொண்டு இலக்கை நோக்கி நடந்தார்.
56
திருச்செந்தூரே அதிரும்படி மக்கள் ஆதரவு பெருகியது
திருச்செந்தூரை அடைந்தபோது கலைஞரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அங்கிருந்த பொதுக்கூட்டத்தில் அமர்ந்தவாறே அவர் ஆற்றிய உரை இன்றும் பிரபலம்: "ஆண்டுதோறும் சூரனை சுப்பிரமணியன் வதம் செய்வார். ஆனால், தற்போது சுப்பிரமணியனை சூரன்கள் வதம் செய்துள்ளனர்" என்று அவர் முழங்கியபோது திருச்செந்தூர் கடற்கரையே அதிரும்படி மக்கள் ஆதரவு பெருகியது.
66
வரலாற்றை மாற்றிய போராட்டம்
இந்த நடைபயணம் வெறும் அரசியல் போராட்டமாக மட்டுமன்றி, ஒரு நேர்மையான அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாறியது. 1972-ல் தூத்துக்குடியில் மாநில சுயாட்சி முழக்கத்தை முன்னெடுத்தது முதல், 1982-ல் திருச்செந்தூர் வரை நீண்ட கலைஞரின் இந்த அரசியல் பயணம், திமுகவின் போராட்ட வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயமாகும்.