அத்தனையும் பொய்...
ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே… இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே…. சொல்வது அத்தனையும் பொய்.
பிரதான எதிர்க்கட்சி மக்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்.
டிஆர்பி ராஜா அவர்களே, உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை.
ஒரு புள்ளி விவரம் சொல்கிறேன். தொழிற்சாலைகளில் 2019-20 ஆண்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16.91 பர்சண்டேஜ். அதே 2023-24 திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை 15.95% என்று குறைந்திருக்கிறது. 2019-20ல் ஃபேக்ட்ரி கவுன்ட் பெர்சன்டேஜ் 15.75%, அதே 2023-24 திமுக ஆட்சியில் 15.42%. அப்படியென்றால் தொழிற்சாலை அதிகமாக வந்து வேலை அதிகமாக கிடைத்தது என்றால் என்ன அர்த்தம்? அத்தனையும் பொய். இப்படி பொய் செய்திகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது.
வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் நிறைந்த பகுதி, பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கிறது. நூற்பாலை தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது, மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் நூல் மில்கள் எல்லாம் மூடுகின்ற அபாயமும், தொழிலாளர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.