நம் மீது கை வைக்க நினைப்பவர்களுக்கு எதிராக மை வைத்தால் போதும்.. மக்கள் வெள்ளத்தில் கெத்து காட்டிய கமல்..!

First Published Feb 20, 2023, 11:57 AM IST

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் தன்னுடை வெற்றியாகவே திமுக பார்க்கிறது. ஆகையால், அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டாக மாற்ற அதிமுகவினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனால், ஈரோடு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து  நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.  

அப்போது, பேசிய கமல்;- ஒரு சின்னத்தில் நின்றுவிட்டு தற்போது வேறு சின்னத்திற்காக ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன் என நீங்கள் நினைக்கலாம். நாட்டில் சர்வதிகார போக்கு தலை தூக்குகிறது. அதனால் யாருடன் கை கோர்க்க வேண்டும் என எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும்.

ஆபத்து காலத்தில் சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருக்கிறது. நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது,  என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். 

இது நாட்டு பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினேன். என்னுடைய கடனையெல்லாம் தீர்த்து தற்போது எந்த லாபமும் எதிர்பார்க்காமல் வந்துள்ளேன். நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் என்றார். 

click me!