துறையூர் தனித் தொகுதியில் பெரும்பான்மை சமுதாயத்திற்கே சீட் மறுப்பது என்பது அ.தி.மு.க. தன் காலில் தானே கோடரியால் அடித்துக் கொள்வதற்குச் சமம். கடந்த 2016-ல் ஜெயலலிதா காட்டிய அதே துணிச்சலான பார்முலாவை இப்போதைய தலைமை ஏன் பின்பற்றத் தயங்குகிறது?
துறையூர் தனித் தொகுதியில் 55 ஆயிரம் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை வைத்துக் கொண்டு, அந்தச் சமுதாயத்திற்கே சீட் மறுப்பது என்பது அ.தி.மு.க. தன் காலில் தானே கோடரியால் அடித்துக் கொள்வதற்குச் சமம். கடந்த 2016-ல் ஜெயலலிதா காட்டிய அதே துணிச்சலான பார்முலாவை இப்போதைய தலைமை ஏன் பின்பற்றத் தயங்குகிறது? 'சிலரின்' சுயநலத்திற்காக ஒரு தொகுதியையே தி.மு.க.விடம் அடகு வைக்கத் துணிந்துவிட்டார்களா என்ற கேள்வி இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
துறையூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய அரசியல் களம், ஒரு போர்க்களத்தைப் போலக் காட்சியளிக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்கள் கூட இன்று அக்கட்சிக்குச் சவாலாக மாறியிருப்பதற்குக் காரணம், வேட்பாளர் தேர்வில் நிலவுவதாகக் கூறப்படும் குளறுபடிகள்தான்.
கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தி.மு.க. தொடர் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க.வின் இந்த 'ஹாட்ரிக்' வெற்றியைத் தடுக்க அ.தி.மு.க. தீவிரமாக உழைக்க வேண்டிய சூழலில், கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் கொந்தளிப்பு அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
24
வாக்கு வங்கியை தீர்மானிக்கும் சக்தி
துறையூர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் சமுதாய வாக்குகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இங்கு முத்தரையர் சமூகத்தினர் கணிசமாக இருந்தாலும், சுமார் 55,000-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்குகள் வெற்றியாளரை முடிவு செய்யும் சக்தியாக உள்ளன. கடந்த காலங்களில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கே வாய்ப்பளித்து வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது அ.தி.மு.க.வில் தகுதியான தேவேந்திரகுல வேளாளர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள், அந்தச் சமுதாய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த, தொகுதிக்கு அறிமுகமான ஒருவரை நிறுத்தினால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும்" என்பது அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்களின் திட்டவட்டமான குரலாக இருக்கிறது.
34
வேட்பாளரை மாற்றும் முடிவு?
பல ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி, மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட முக்கியப் பிரமுகருக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள சிலரின் முட்டுக்கட்டை காரணமாக, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், "தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லை என்றால், நாங்கள் ஏன் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
"உளவுத்துறை ரிப்போர்ட் சாதகமாக இருந்தும், சிலரது சுயநலத்தால் தகுதியான வேட்பாளர் புறக்கணிக்கப்படுகிறார். இது தி.மு.க.வின் வெற்றியை எளிதாக்கும் செயலாகவே அமையும்" என உள்ளூர் நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
அ.தி.மு.க. தலைமை இந்தச் சமுதாயக் கொந்தளிப்பைச் சரியாகக் கையாண்டு, வெற்றி வாய்ப்புள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வேட்பாளரை நிறுத்தத் தவறினால், துறையூரில் தி.மு.க.வின் வெற்றி மிக எளிதாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், கட்சி நிர்வாகிகள் 'மாற்றி யோசிக்க' ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. தலைமைக்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கை மணி. வெற்றிப் பாதைக்குத் திரும்புமாஅ.தி.மு.க அல்லது கோட்டையைத் தாரைவார்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.