இது குறித்து, அதிமுகவினர் கூறுகையில், ‘‘அதிமுக வில் ஒவ்வொரு தொண்டனும், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஆனால், கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், அவருடன் இருக்கும் ஒரு சில தலைவர்களும், கட்சி ஒன்றிணைவதில் விருப்பம் இல்லாமல் இருந்தனர்.
தற்போது, பாஜக அழுத்தத்தால், கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரனின் அமமுக சேர்த்துக் கொள்ளப்பட்ட பின், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம் நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸையும் கட்சிக்குள் இணைக்க வேண்டும்.
அப்போது தான், தென் மாவட்டங்களில் திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு கட்சி பலமடையும் என, கட்சியினரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதை, கட்சியின் பல மட்டங்களிலும் இருக்கும் நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறி விட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்புலமாக இருந்து செயல்படும், தமிழகத்தின் பிரபலமான பாஷ்யம் கட்டுமான நிறுவன தொழில் அதிபர் அபினேஷ், 'ஓபிஎஸை கட்சிக்குள் எக்காரணம் கொண்டும் இணைத்து விடக்கூடாது. அப்படி இணைத்தால், அவர் உங்களுக்கு போட்டியாக பொதுச் செயலராகவும், கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சிப்பார்’’ என எடப்பாடி பழனிசாமியிடம் துாபம் போட்டுக் கொண்டே இருக்கிறார். இதனால்தான் ஓபிஎஸுக்கு சாதகமான முடிவை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.