
ஓபிஎஸ் தமிழக அரசியலில் ஒரு முக்கியமான நபராக இருந்தாலும், தற்போது அவர் சில சவால்களை எதிர்கொண்டுள்ளார். அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக மூன்று முறை இருந்தவர். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ‘கட்சி விரோத செயல்’ குற்றச்சாட்டில் பொருளாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தை உச்சநீதிமன்றம் 2023-ல் உறுதிப்படுத்தியது.
தற்போது வரை, ஓ.பி.எஸ். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை உறுதியாக நிராகரித்து வருகிறார். சமீபத்தில் ‘ஓ.பி.எஸுக்கு கட்சியில் இடமில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பி.எஸ் நினைத்தபடி, அவ்வளவு எளிதாக அதிமுகவில் இணைய முடியவில்லை. அவர், தனக்கு எதிராக இருக்கும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை, 'டி.டி.வி.தினகரனை குறிப்பிடுவது போல அருமை சகோதரர்' என மறைமுகமாக குறிப்பிட்டு, கெஞ்சாத குறையாக அதிமுகவில் இணைய வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னரும் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
'எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட அதிமுக தலைமை கழகத்தை, ஆட்களை வைத்து தாக்கியவர். அதனாலேயே, அவரை பொதுக்குழு வாயிலாக கட்சியிலிருந்து நீக்கினோம். பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை' என நிராகரித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவை காரணம் காட்டி ஓபிஎஸுக்கு கதவடைக்கப்பட்டு விட்டாலும், அதன் பின்னணியில் பாஷ்யம் கட்டுமான நிறுவன தொழிலதிபர் அபினேஷின் கரங்கள் அழுத்தமாக படிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, அதிமுகவினர் கூறுகையில், ‘‘அதிமுக வில் ஒவ்வொரு தொண்டனும், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்றே விரும்புகிறான். ஆனால், கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், அவருடன் இருக்கும் ஒரு சில தலைவர்களும், கட்சி ஒன்றிணைவதில் விருப்பம் இல்லாமல் இருந்தனர்.
தற்போது, பாஜக அழுத்தத்தால், கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரனின் அமமுக சேர்த்துக் கொள்ளப்பட்ட பின், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகம் நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸையும் கட்சிக்குள் இணைக்க வேண்டும்.
அப்போது தான், தென் மாவட்டங்களில் திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு கட்சி பலமடையும் என, கட்சியினரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதை, கட்சியின் பல மட்டங்களிலும் இருக்கும் நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறி விட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு பின்புலமாக இருந்து செயல்படும், தமிழகத்தின் பிரபலமான பாஷ்யம் கட்டுமான நிறுவன தொழில் அதிபர் அபினேஷ், 'ஓபிஎஸை கட்சிக்குள் எக்காரணம் கொண்டும் இணைத்து விடக்கூடாது. அப்படி இணைத்தால், அவர் உங்களுக்கு போட்டியாக பொதுச் செயலராகவும், கட்சியை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் முயற்சிப்பார்’’ என எடப்பாடி பழனிசாமியிடம் துாபம் போட்டுக் கொண்டே இருக்கிறார். இதனால்தான் ஓபிஎஸுக்கு சாதகமான முடிவை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
பாஷ்யம் அபினேஷின் செயல்பாடுகளே சந்தேகத்துக்குரியவை. அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பி.எஸ் துணை முதல்வராக இருந்தபோது, அவரோடு நெருக்கமாக இருந்து, சட்டத்துக்கு புறம்பான காரியங்களை செய்தவர். நிறைய பண பலன்களை பார்த்தவர்.
ஒரு கட்டத்தில், ஓ.பிஎஸ் தரப்பில் ரூ.1000 கோடி பெற்று, திருப்பிக் கொடுக்காமல் அவருக்கே அல்வா கொடுத்தவர். மீண்டும் ஓபிஎஸ் அதிமுகவுக்குள் வந்து, பலம் பொருந்தியவராக மாறி விட்டால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்திலும், அவரை கட்சிக்குள் இணைய விடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்.
இந்த உள்சூட்சமங்கள் புரியாமல், அவர் சொல்படியெல்லாம் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது, கட்சிக்கு நல்லதல்ல. குறிப்பாக, பாஷ்யம் அபினேஷ் குறித்து சொல்ல வேண்டும் என்றால் அவர், திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களோடும் நெருக்கமான உறவில் இன்றும் இருந்து கொண்டிருப்பவர்’’ என்கிறார்கள்.
யார் இந்த அபினேஷ்? என்பது குறித்து விரிவாக, ‘‘அந்த ரூ.5000 கோடி..! அதிமுக இணைந்துவிடக் கூடாது..! அமித் ஷாவிடம் உறவாடிக் கெடுக்கும் பாஷ்யம் அபினேஷ்..?’’ என்கிற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.