தமிழ்நாட்டில் 3 ஊராட்சிகளுக்கு சுமார் 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கலைஞர் ஆட்சியில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தேர்தல் நடத்தப்பட்டது. அதைப்பற்றி பார்க்கலாம்.
தலீத் சமூகத்தை சேர்ந்தவர் தலைவராகக் கூடாது என ஆதிக்க சாதியினர் தடுத்ததால் மதுரை மாவட்டத்தில் உள்ள 3 ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, ஸ்டாலினை களத்தில் இறக்கிவிட்டு, 10 வருட பிரச்சனையை பேசி முடித்து, வெற்றிகரமாக தேர்தலையும் நடத்தி முடித்தார்கள். பின்னாளில் அந்த ஊராட்சிக்கே நேரடியாக சென்று அங்கு கிராம சபை கூட்டத்தையும் நடத்தினார் ஸ்டாலின். அந்த மூன்று ஊராட்சிகளைப் பற்றியும், அதில் தேர்தல் நடத்துவதில் இருந்த சவால்களைப் பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
24
10 ஆண்டுகள் தேர்தல் நடத்தப்படாதது ஏன்?
1996 முதல் 2006 வரை சுமார் 10 ஆண்டுகள், மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெறவே இல்லை. ஏனெனில் இந்த பஞ்சாயத்துகளில் தலைவர் பதவி தலீத்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆதிக்க சாதியினர் தலீத்களை தலைவராக ஏற்க மறுத்து, தேர்தல் நடத்த விடாமல் தடுத்து வந்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்ய விடாமலும், அப்படியே தாக்கல் செய்தால், மிரட்டி வாபஸ் பெற செய்வதும், அதையும் மீறி போட்டியிட்டு வென்றால், பதவிப் பிரமாணமே எடுக்க விடாமல் ராஜினாமா செய்ய வைப்பது என பல ஆண்டுகள் ஜனநாயகமே அங்கு செயலிழந்தது.
34
பிரச்சனையை முடித்து வைத்த ஸ்டாலின்
இந்த 10 ஆண்டுகளாக நீண்ட ஜனநாயக தடையை உடைக்க, 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி அரசு உறுதியுடன் முன்னேறியது. அப்போது ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறையை, கையாண்டவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவர் இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை விதிகளில் திருத்தம் செய்து, இந்த ஊராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு உத்தரவு பிறப்பித்து, தேர்தல் நடத்த வழி திறந்தார். அப்போதைய மதுரை ஆட்சியரான உதய சந்திரனின் நடவடிக்கை மூலம், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. மக்களும் அச்சமின்றி வந்து வாக்களித்தனர்.
அந்த தேர்தலில் பாப்பாபட்டியில் பெரியகருப்பன் என்பவர் வெற்றிபெற்றார். அதேபோல் நாட்டாமங்கலத்தில் கணேசனும், கீரிப்பட்டியில் பால்சாமி என்பவரும் வெற்றிபெற்றனர். இந்த வரலாற்று செயலுக்கு கலைஞர் வெற்றி பெற்ற மூவரையும் சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தினார். பின்னர் 2021ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அக்டோபர் 2ந் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பாப்பாபட்டியில் நேரடியாக கலந்துகொண்டு, மக்களுடன் விவாதித்தார். தமிழக வரலாற்றில் முதல்வர் ஒருவர், கிராமசபையில் பங்கேற்ற முதல், நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.