Raindrop Facts: மழைத்துளிகள் கண்ணீர்த் துளி வடிவத்தில் இருக்கும்னு நாம எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் மழைத்துளியின் உண்மையான வடிவம் அது இல்லைன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. அப்போ உண்மையான வடிவம் என்னவென்று பார்போம்.
பூமியில் உள்ள நீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. இந்த நீராவி மேலே செல்லச் செல்ல குளிர்ச்சியடைகிறது. அப்போது, சிறிய நீர்த் துகள்கள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. இப்படி லட்சக்கணக்கான நீர்த் துகள்கள் சேர்ந்துதான் மேகங்கள் உருவாகின்றன.
முதலில் இந்தத் துளிகள் மிகச் சிறியதாக இருக்கும். போகப்போக, மேலும் பல நீர்த் துகள்கள் சேர்வதால் அவை பெரிதாகின்றன. ஒரு கட்டத்தில், அவற்றின் எடை அதிகரித்து பூமியை நோக்கி விழத் தொடங்குகின்றன. இதைத்தான் நாம் மழைத்துளிகள் என்கிறோம்.
25
துளிகள் முதலில் ஏன் வட்டமாக இருக்கின்றன?
நீர்த் துகள்களுக்கு இடையே இருக்கும் 'சர்ஃபேஸ் டென்ஷன்' (Surface Tension) என்ற விசையால், நீர் இயற்கையாகவே வட்ட வடிவத்தைப் பெறுகிறது. சர்ஃபேஸ் டென்ஷன் என்பது, நீரின் மேற்பரப்பில் உள்ள துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதாகும். இந்த ஈர்ப்பு விசையால், நீர் குறைந்த இடத்தில் அதிக கொள்ளளவை அடக்க முயற்சிக்கிறது. இதனால்தான் நீர்த்துளி வட்டமாக மாறுகிறது. விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும்போது, நீர்த்துளிகள் முழுமையான கோள வடிவத்தில் காணப்படும்.
35
பூமியை நோக்கி விழும்போது வடிவம் ஏன் மாறுகிறது?
மழைத்துளிகள் மேகத்திலிருந்து கீழே விழும்போது, காற்றின் எதிர்ப்பை (Air Resistance) சந்திக்கின்றன. இந்தக் காற்றின் அழுத்தம், துளியின் அடிப்பகுதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், துளியின் அடிப்பகுதி தட்டையாக மாறுகிறது. ஆனால், மேல் பகுதி வட்டமாகவே இருக்கும். இதனால், மழைத்துளியின் வடிவம் ஒரு 'ஹம்பர்கர் பன்' போலத் தோற்றமளிக்கும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் ஆய்வுகளின்படி, நடுத்தர அளவுள்ள மழைத்துளிகள் இப்படித்தான் இருக்கும். நாம் நினைப்பது போல கண்ணீர்த் துளி வடிவம் கிடையாது.
மிகப்பெரிய மழைத்துளிகள் இன்னும் அதிகக் காற்றின் அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இதனால், அவை பாராசூட் அல்லது ஜெல்லிஃபிஷ் போல வளைந்துவிடும். இன்னும் பெரிதாகும்போது, காற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சிறிய துளிகளாக உடைந்துவிடும். இதனால்தான், இயற்கையில் மிகப் பெரிய மழைத்துளிகளைப் பார்க்க முடிவதில்லை. அவை பூமியை அடையும் முன்பே உடைந்துவிடுகின்றன.
55
அப்படியானால், கண்ணீர்த் துளி வடிவம் எப்படி பிரபலமானது?
இங்குதான் பலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். வானிலிருந்து விழும் மழைத்துளிகள் அல்ல, ஜன்னல் கண்ணாடி அல்லது இலைகளின் மீது வழிந்து செல்லும் நீர்த் துளிகள்தான் கண்ணீர்த் துளி வடிவத்தில் இருக்கும். ஏனென்றால், அவை ஒரு பரப்பின் மீது நகரும்போது, ஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு வால் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. பழைய ஓவியங்கள், கார்ட்டூன்கள் மற்றும் பாடப்புத்தகங்களில், எளிதாக அடையாளம் காண இந்த வடிவத்தையே மழைத்துளிக்கு அடையாளமாகப் பயன்படுத்தினர். நாளடைவில், அதுவே உண்மை எனப் பலரும் நம்பத் தொடங்கிவிட்டனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.