சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார். தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்று எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதையடுத்து, சில காலம் காசியில் வசித்து வந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.