குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்று வரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக மற்றும் பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார். குஜராத்தில் தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளிலேயே அவர் சோம்நாத் வந்தடைந்தார்.
சோம்நாத் வந்த பிரதமர் மோடி, முதலில் ஆலயத்தில் தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் காட்சிகளை பார்வையிட்டார். பின்னர், நூற்றுக்கணக்கான சந்நியாசிகள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்று ‘ஓம்’ ஜபத்தில் இணைந்து தியானம் செய்தார். இந்த தொடர்ச்சியான ஜபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஆன்மிகவாதிகள் திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
சோம்நாத் ஆலயம், சிவபெருமானின் 12 ஆதிஜ்யோதிர்லிங்கங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், 1026ஆம் ஆண்டு முகமது கஸ்னி மேற்கொண்ட தாக்குதலுக்கு 1000 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த சுவாபிமான் பர்வ் நடத்தப்படுகிறது. இதனால், ஆலய நகரம் முழுவதும் விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது.