
ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு 'அரசு அதிகம் முயற்சி செய்ய முடியாது' என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அரசு தலையிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏமனின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அரசு அதிகம் செய்ய முடியாது” என அரசின் வழக்கறிஞர் ஏஜி வெங்கடரமணி கூறியதாக லைவ் லா தெரிவித்துள்ளது. நிமிஷாவைக் காப்பாற்ற தனிப்பட்ட முறையில் தங்களால் முடிந்த சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதாக அரசு தெரிவித்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்றும் கூறியது.
"இந்திய அரசுக்கு ஒரு எல்லை உண்டு. நாங்கள் அதை அடைந்துவிட்டோம். ஏமன் உலகின் மற்ற பகுதிகளைப் போல இல்லை. நாங்கள் நிலைமையை பகிரங்கப்படுத்தி சிக்கலாக்க விரும்பவில்லை, நாங்கள் தனிப்பட்ட அளவில் முயற்சி செய்கிறோம்," என்று வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், மனுதாரர், ஏமனில் உள்ள கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தக் கோரினார். ஏமனின் ஷரியா சட்டத்தின் கீழ் 'இரத்தப் பணம்' என்ற இழப்பீடுத் தொகை வழங்கும் விதியின் கீழ், நிமிஷாவின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.8.6 கோடி வழங்க முன்வந்துள்ளனர்.
ஆனால், இந்த இரத்தப் பணம் என்பது ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அரசு சில ஷேக்குகள் மற்றும் சில செல்வாக்கு மிக்கவர்களுடன தனிப்பட்ட முறையில் பேசி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஒரு கொலை வழக்கில் சிக்கியதால் ஏமன் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஜூன் 16 அன்று அவரைத் தூக்கிலிட திட்டமிடப்பட்டுள்ளது. இவர் தற்போது ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக் குழுவினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், இந்த சிக்கலைக் கையாள்வதில் உள்ள வரம்புகள் குறித்து மத்திய அரசு நீதிமன்றதிதல் எடுத்துரைத்தது. ஏமனில் என்ன நடக்கிறது என்பதை அறிய எந்த வழியும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
நிமிஷா பிரியா 2011 இல் தனது குடும்பத்துடன் வேலைக்காக ஏமன் சென்றார். ஆனால் அவரது கணவரும் மகளும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிதிப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா திரும்பினர். நிமிஷா தனது குடும்பத்திற்காக சம்பாதிக்க அங்கேயே தங்கி ஒரு கிளினிக்கைத் திறக்க முடிவு செய்தார். இதற்காக ஏமன் சட்டப்படி, அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மஹ்தியுடன் கூட்டாக செயல்படத் தொடங்கினார்.
இந்நிலையில், மஹ்தி நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி அச்சுறுத்தியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளார். தனது பாஸ்போர்ட்டைப் பெற்று ஏமனை விட்டு வெளியேற முயன்ற நிமிஷா, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுக்க முயன்றார். ஆனால், அந்த மருந்து அதிகப்படியாகி மஹ்தி இறந்துவிட்டார். இதனால், மஹ்தியின் கொலைக்கு நிமிஷாதான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டு, 2020 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாளை மறுநாள் (ஜூலை 16) நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், கடைசி நேர முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கு ஜூலை 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.