
Pakistan Army Involvement Pahalgam Attack: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பினாமி குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி), இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டதை என்ஐஏ தனது முதற்கட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் நடத்தியவர்களுக்கு தளவாட உதவி வழங்கியதாகக் கூறப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சுமார் 20 நிலத்தடிப் பணியாளர்களை (ஓஜிடபிள்யூ) என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
என்ஐஏ விசாரணை தீவிரம்
ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய OGW-க்களான நிசார் அகமது என்கிற ஹாஜி மற்றும் முஷ்டாக் உசேனை விசாரிக்கவும் NIA தயாராகி வருகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த இருவரும் அறியப்பட்ட LeT கூட்டாளிகள். மேலும் 2023 ஆம் ஆண்டு பாட்டா துரியன் மற்றும் டோட்டகாலியில் இராணுவம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதற்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தளவாடங்கள்
என்ஐஏ விசாரணையின்படி, பஹல்காம் தாக்குதலை ISI பயங்கரவாத இயக்கம் மற்றும் இராணுவம் உள்ளிட்ட பாகிஸ்தான் அரசின் தீவிர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் LeT திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் ஹஷ்மி மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் எல்லையைத் தாண்டி கையாளுபவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பாகிஸ்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து தளவாடங்கள் உள்ளிட்ட வழிமுறைகளைப் பெற்றனர்.
பைசரனை தேர்வு செய்தது ஏன்?
தாக்குதல் நடத்துவதற்கு வாரங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும், அவர்களுக்கு உள்ளூர் OGW-கள்தங்குமிடம் வழங்கி ஆதரவு அளித்துள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உளவும் பார்த்துள்ளனர். ஏப்ரல் 15 ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காமை அடைந்து, பைசரன் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு, பேத்தாப் பள்ளத்தாக்கு மற்றும் ஒரு உள்ளூர் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய நான்கு சாத்தியமான இடங்களை ஆய்வு செய்துள்ளனர். பாதுகாப்பு குறைவாக இருந்ததால் அவர்கள் இறுதியில் பைசரனைத் தேர்ந்தெடுத்தனர்.
40க்கும் மேற்பட்ட தோட்டாக்கள்
அந்த இடத்திலிருந்து NIA 40க்கும் மேற்பட்ட தோட்டாக்களை மீட்டுள்ளது. அவை பாலிஸ்டிக் மற்றும் வேதியியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. என்ஐஏ அதிகாரிகள் அந்தப் பகுதியை 3D மேப்பிங்கிலும் விசாரணை நடத்தினார்கள். தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் இப்பகுதியில் செயற்கைக்கோள் தொலைபேசி செயல்பாடு அதிகரித்தது. பைசரன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது மூன்று செயற்கைக்கோள் தொலைபேசிகள் செயல்பாட்டில் இருந்தன, மேலும் இருவரிடமிருந்து சிக்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2,000க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை
என்ஐஏவால் இதுவரை, 2,800க்கும் மேற்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய OGWகள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பல்வேறு ஹுரியத் பிரிவுகள் போன்ற தடைசெய்யப்பட்ட குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் காவலில் உள்ளனர். பஹல்காம் மற்றும் அதைச் சுற்றியுள்ள போக்குவரத்து இடங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
விரைவில் விசாரணை அறிக்கை
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ரஜோரி-பூஞ்ச் கான்வாய் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையே சாத்தியமான தொடர்பு ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என் ஐ ஏ தனது விசாரணை அறிக்கையை விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்க உள்ளது. அப்போது முழுமையான விவரங்கள் தெரியவரும்.
பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்
மேலும் பயங்கரவாதிகள் இயற்கை குகைகள் மற்றும் காடுகள் நிறைந்த மறைவிடங்களில் மறைந்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். பைசரன் பள்ளத்தாக்கு, தரனாவ் ஹாப்ட்குண்ட், டவ்ரூ மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக நமது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.