இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தனது தரப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக மாறி உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 4) நேரடியாக வாதாடியுள்ளார்.
வழக்கறிஞர் உடை அணிந்து வாதாடிய மம்தா பானர்ஜி, ''வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தவறுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தைக் குறிவைத்து உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார்.
சூப்பராக வாதாடிய மம்தா பானர்ஜி
''இந்த சிறப்புத் திருத்தம் நீக்குதலுக்கானது. சேர்ப்பதற்கானது அல்ல. தர்க்கரீதியான முரண்பாடுகள் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக குறிவைக்கப்பட்டுள்ளனர்.
தத்தா மற்றும் டட்டா, ராய் மற்றும் ரே, கங்குலி மற்றும் கங்கூலி போன்ற பொதுவான வங்காள குடும்பப்பெயர் வேறுபாடுகள் பொருத்தமின்மையாக கருதப்பட்டு தேர்தல் ஆணையம் நீக்குகிறது.
ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா?'' என்று மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார்.