
நமது பாரத தேசத்துக்கே உணவளிப்பவர்கள் விவசாயிகள். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தூணாக விளங்கி வரும் விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் முதல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வரை என பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்காக (ஏப்ரல் 1, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "நமது 'அன்னதாதா'க்களான விவசாய சகோதரர்களுக்காக, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ், காரீஃப் பருவத்துக்கு ரூ.41,534 கோடி மதிப்பிலான முழுமையான மானியத் திட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
2026 காரீஃப் பருவத்துக்கான உத்தேச பட்ஜெட் தேவை சுமார் ரூ.41,533.81 கோடியாக இருக்கும். இது 2025 காரீஃப் பருவத்துக்கான பட்ஜெட்டை விட சுமார் ரூ.4,317 கோடி அதிகம். 2025-ல் இந்த மானியத்துக்காக ரூ.37,216.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மானியத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியான மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, P&K உரங்களுக்கான மானியம் முறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் மற்றொரு பயனாகும். DAP மற்றும் NPKS உள்ளிட்ட P&K உரங்களுக்கான மானியம், 2026 காரீஃப் பருவத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் தடையின்றி கிடைக்கும்.
விவசாயிகள் நலனில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு பற்றி பேசிய வைஷ்ணவ், "கொரோனா காலமாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றமாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல நிற்கிறார். சர்வதேச சந்தையில் உரங்களின் விலை எவ்வளவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அந்த பாதிப்பு ஒருபோதும் நமது விவசாயிகளைத் தாக்கக் கூடாது என்பதை அவர் உறுதி செய்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம், DAP உட்பட 28 வகையான P&K உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. P&K உரங்களுக்கான மானியம், 01.04.2010 முதல் NBS திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டின்படி, மலிவு விலையில் P&K உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.
யூரியா, DAP, MOP மற்றும் சல்பர் போன்ற உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, 2026 காரீஃப் பருவத்துக்கான P&K உரங்களுக்கான NBS விகிதங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட விகிதங்களின்படி உர நிறுவனங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையில் உரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.