மியான்மர் எல்லையில் ஒரு மினி தமிழ்நாடு... யார் இந்த மணிப்பூர் தமிழர்கள்?

Published : Dec 03, 2025, 02:51 PM IST

ஃபேமிலி மேன் சீசன் 3 வெப் தொடருக்கு பின்னர் மணிப்பூர் தமிழர்கள் பற்றி பலரும் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதன் பின்னணியையும் வரலாறையும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
12
Mini Tamilnadu in Myanmar Border

ஃபேமிலி மேன் என்கிற வெப் தொடரின் மூன்றாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் தொடரின் ஒரு காட்சியில், விஜய் சேதுபதி, மோரே என்கிற பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அந்த காட்சியில் விஜய் சேதுபதியுடன் வந்த சக போலீஸ் அதிகாரி ஒருவர் இங்க எப்படி இவ்வளவு தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என கேட்பார். இந்த இடம் தமிழ்நாட்டை போல இருப்பதாக சொல்லுவார். அந்த ஒரு காட்சியில் காட்டப்படும் மோரே என்கிற பகுதி ஒரு மினி தமிழ்நாடு என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பர்மாவிற்கு தமிழர்கள் வந்தது எப்படி?

ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில், இந்தியா, சீனா, வங்காளதேசம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை எல்லைகளாக கொண்ட அழகிய இயற்கை வளம் மிகுந்த நாடு தான் பர்மா, தற்போது அது மியான்மர் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. பர்மிய மொழியை தாய்மொழியாக கொண்டு உருவான இந்த நாடு, 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொங்கு வம்சத்தினரால் பேரரசு ஆக்கப்பட்டது. குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய பேரரசாக மாறிய நாடு என்கிற பெருமையும் பர்மாவுக்கு உண்டு. இயற்கை வளம்மிக்க நாடு என்பதாலேயே பல பேரரசுகள் பர்மாவை ஆழத் துடித்தனர்.

19ம் நூற்றாண்டில் மூன்று முறை நடந்த ஆங்கிலேய - பர்மிய படைகளுக்கு இடையிலான போர்களுக்கு பிறகு ஆங்கிலேய அரசு பர்மாவை கைப்பற்றி, தனது ஆட்சி அதிகாரத்தை செலுத்தியது. அதன்பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரிட்டன் அரசிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர, ஜனநாயக நாடாக மாறியது பர்மா. அன்றில் இருந்து அங்கு புலம்பெயர்ந்த பலருள் தமிழர்கள் மிக முக்கியம் ஆனவர்கள். பர்மாவிற்கு தொழில் செய்யவும், விவசாயம் செய்யவும் அங்கு சென்ற தமிழர்கள் பலர், நிரந்தரமாகவே அங்கே தங்கிவிட்டனர்.

22
இராணுவத்தால் விரட்டப்பட்ட தமிழர்கள்

பொருளாதாரமும் நாடும் வளர்ந்து வந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரமும் நல்ல நிலையை எட்டியது. இந்த நிலையில், ஜனநாயகத்தை மீறி இராணுவம் ஆட்சியை கையில் எடுக்க முடிவெடுத்தது. அப்போதைய இராணுவ ஜெனரலான நீ வின் என்பவர், ஜனநாயகத்தை கவிழ்த்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பர்மாவைக் கொண்டு வந்தார். 1962-ல் பர்மாவில் இராணுவ ஆட்சியை அமைத்த ஜெனரல் நீ வின் நாட்டின் பல திட்டங்களை முடக்கியதுடன், பல கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

வேறு நாடுகளில் இருந்து பர்மாவிற்கு வருவதற்கென பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. மேலும் பர்மிய நாட்டை சேராதவர்கள் வெளியேறவும் உத்தரவிட்டார். முக்கியமாக அங்கு அதிகளவில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றுவதில் நீ வின் அதிகம் முனைப்பு காட்டினார். இதனால் அங்கு தொழில் மற்றும் விவசாயத்தில் சிறந்து விளங்கிய பல தமிழர்கள் உடனடியாக பர்மாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அங்கு இருந்த தமிழர்களின் சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பர்மாவை விட்டு வெளியேறினர்.

மோரே மினி தமிழ்நாடு ஆனது எப்படி?

இப்படி பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பர்மாவுக்கு தரை மார்கமாக செல்ல முயன்றபோது அந்நாட்டு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த எல்லைப் பகுதியிலேயே தமிழர்கள் முகாமிட்டனர். நாளடையில் அவர்கள் தங்கியிருந்த மோரே என்கிற பகுதி ஒரு மினி தமிழ்நாடாக மாறிப்போனது. அங்குள்ள தமிழர்களுக்கு பர்மிய மொழி தெரிந்திருந்ததால், எல்லை தாண்டி வர்த்தகம் செய்ய வரும் பர்மியர்களுடனான வர்த்தக உறவு அதிகரித்தது. வியாபாரம் வளர வளர மோரேவில் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் தான் மோரே ஒரு மினி தமிழகம் போல் காட்சியளிக்கிறது. அங்கு தமிழர்கள் கட்டிய கோவில்களும் இருக்கின்றன. அதில் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories