
உயர்கல்வி படிப்புக்கான கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாணவர்களாலும் முழு கல்விச் செலவையும் ஒரே நேரத்தில் செலுத்த முடியாது. குறிப்பாக பொறியியல், மருத்துவம், மேலாண்மை, வெளிநாட்டுப் படிப்புகள் போன்றவற்றுக்கான கட்டணம் மட்டுமின்றி, விடுதி, புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளும் சேர்ந்து கல்விச் செலவை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சூழலில் Education Loan எனப்படும் கல்விக்கடன் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறலாம்.
இவ்வாறு கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி என்ன? தேவையான ஆவணங்கள், கடன் வரம்பு, வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் UG, PG, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் தேர்வு செய்த படிப்பு, கல்வி நிறுவனம், பெற்றோர் அல்லது குடும்ப வருமானம், தேவையான கடன் தொகை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தகுதி தீர்மானிக்கப்படும்.
கல்விக்கடன் தொகை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மாணவர் தேர்வு செய்த படிப்பு, கல்லூரிக் கட்டணம், விடுதி, புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் செலவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வங்கியின் விதிமுறைகளின்படி கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.
கல்விக்கடனுக்கு தேவையான ஆவணங்கள்
குறிப்பு: தேவையான ஆவணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.
கல்விக்கடனுக்கு ஒரே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் கிடையாது. கடன் வழங்கும் வங்கி, கடன் திட்டம், தொகை, மாணவர் படிக்கும் நிறுவனம் , படிப்பு மற்றும் வங்கியின் விதிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்து வட்டி மாறுபடும்.
கல்விக்கடன் வட்டி விகிதம், வங்கியின் benchmark rate மற்றும் அதனுடன் சேர்க்கப்படும் spread அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், கடன் தொகை, படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் தகுதி, அடமானம் அல்லது உத்தரவாதம் போன்றவற்றைப் பொறுத்தும் வட்டி மாறுபடலாம்.
தகுதியான மாணவர்களுக்கு அரசு திட்டங்களின் கீழ் வட்டி சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடன் பெறுவதற்கு முன் வட்டி விகிதம், moratorium காலம், repayment காலம் மற்றும் processing fee ஆகியவற்றை வங்கியிடம் தெரிந்துகொள்வது அவசியம்.
PM-Vidyalaxmi திட்டம் : மத்திய அரசின் PM-Vidyalaxmi திட்டம் என்பது தகுதியான மாணவர்கள் வங்கியில் கல்விக்கடன் பெறவும், குறிப்பிட்ட வருமான வரம்புக்குள் இருப்பவர்களுக்கு வட்டி சலுகை பெறவும் உதவுகிறது.
PM-Vidyalaxmi திட்டத்தின் கீழ் தகுதியான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) merit அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு பிணையம் (collateral) அல்லது guarantor இல்லாமல் கல்விக்கடன் பெறும் வசதி உள்ளது. இந்த கல்விக்கடன் பெறுவதற்கான பொதுத் தகுதிக்கு குடும்ப வருமான உச்சவரம்பு இல்லை.
முக்கியமாக, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள தகுதியான மாணவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் கிடைக்கும். இந்த மானியம் மாணவர் படிக்கும் காலம் மற்றும் படிப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் 1 ஆண்டு moratorium காலத்திற்கான வட்டியில் வழங்கப்படுகிறது.
Moratorium காலம் என்பது கல்விக்கடன் பெற்ற மாணவர், படிப்பு முடிந்த உடனேயே கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், சில கால அவகாசம் வழங்கப்படும் காலம் ஆகும்.
உதாரணம்: ஒரு மாணவர் 4 ஆண்டுகள் கல்லூரியில் படிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். படிப்பு முடிந்ததும் உடனடியாக EMI செலுத்த வேண்டியதில்லை. திட்ட விதிமுறைகளின்படி 1 ஆண்டு வரை அவகாசம் வழங்கப்படலாம். இந்த காலத்தையே moratorium காலம் என்கிறார்கள்.
அதாவது, படிப்பு முடிந்ததும் உடனே கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேலை கிடைத்து வருமானம் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் என்பதே Moratorium காலத்தின் எளிய விளக்கம்.
குறைந்த குடும்ப வருமானம் கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வட்டிச் சுமையை குறைக்க மத்திய அரசின் CSIS திட்டம் உதவுகிறது. இதன் முக்கிய அம்சம், தகுதியுள்ள மாணவர் கல்விக்கடன் பெற்று படிக்கும் காலத்திலும், படிப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் moratorium காலத்திலும் சேரும் முழு வட்டியையும் அரசு மானியமாக வழங்கும்.
இதனால், மாணவர் படிப்பு முடிந்து கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது, ஆரம்பகட்ட வட்டி சுமை குறையும்.
தமிழக அரசு, மாணவர்களின் சமூகப் பிரிவு, குடும்ப வருமானம், படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உதவிகளை வழங்குகிறது.
BC, MBC, DNC மாணவர்களுக்கு: பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, குறிப்பிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கட்டணச் சலுகைகள் போன்ற உதவிகள் கிடைக்கின்றன.
SC/ST மாணவர்களுக்கு: ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) மாணவர்களுக்கு Post-Matric Scholarship உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பள்ளிக்குப் பிறகு கல்லூரி, தொழில்முறை மற்றும் உயர்கல்விப் படிப்புகளைத் தொடரும் தகுதியான மாணவர்களுக்கு, திட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணம் மற்றும் பிற கல்விச் செலவுகளுக்கு உதவி கிடைக்கலாம்.
உதாரணமாக:
ஒரு மாணவரின் ஆண்டு கல்விச் செலவு ரூ.1 லட்சம் என வைத்துக்கொள்வோம். அரசு உதவித்தொகை மூலம் ரூ.30,000 கிடைத்தால், மீதமுள்ள ரூ.70,000-க்கு மட்டும் குடும்பம் அல்லது கல்விக்கடன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.
எனவே, கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு தங்களது சமூகப் பிரிவு, குடும்ப வருமானம் மற்றும் படிப்பின் அடிப்படையில் தமிழக அரசின் எந்த உதவித்திட்டங்களுக்கு தகுதி உள்ளது என்பதை முதலில் சரிபார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
கல்விக்கடன் பெற SBI, Canara Bank, Bank of Baroda, Union Bank of India, Indian Bank போன்ற பொதுத்துறை வங்கிகளை அணுகலாம். மேலும் சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்குகின்றன.
ஆனால் வங்கியைத் தேர்வு செய்யும்போது வட்டி விகிதம் மட்டும் பார்க்காமல், எவ்வளவு கடன் கிடைக்கும்? வட்டி விகிதம் எவ்வளவு? Collateral தேவையா? Moratorium எவ்வளவு? படிப்பு முடிந்த பிறகு எத்தனை ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்?அரசு வட்டி மானியம் கிடைக்குமா? Processing fee மற்றும் பிற கட்டணங்கள் என்ன? என்பதையும் கேட்க வேண்டும்.
முக்கியமாக: ஒரு வங்கியில் மட்டும் விண்ணப்பிப்பதற்கு முன், குறைந்தது 2 - 3 வங்கிகளின் வட்டி, collateral, processing fee மற்றும் repayment விதிமுறைகளை ஒப்பிட்டு முடிவு செய்வது நல்லது. வங்கியின் விதிமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியதால், விண்ணப்பிக்கும் நேரத்தில் அதிகாரப்பூர்வ வங்கித் தளத்தில் தற்போதைய விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.