'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், . ஒரு சில பேட்ச் வர்க் காட்சிகளை படமாக்கும் பணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அங்கு அமைக்கப்பட்ட வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறிகளை மாட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தளமே சோகத்தில் மூழ்கியது.
விபத்துக்கு காரணம் என்ன?
இது குறித்து தகவல் அறிந்ததும் கானத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, கோவா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சில கூடுதல் காட்சிகளுக்காக (Patchwork) கடந்த 15 நாட்களாக இந்த செட்டில் பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.