வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசையா? இந்த விஷயம் எல்லாம் முக்கியம்!

Published : Jul 15, 2025, 08:12 AM IST

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு:மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுரைகள். பாதுகாப்பான புலம்பெயர்தலுக்கு அதிகாரப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துங்கள். சட்டவிரோத முறைகளைத் தவிர்த்து அபாயங்களைத் தடுங்கள்.

PREV
14
பாதுகாப்பான பயணத்திற்கு முதல் படி: அதிகாரப்பூர்வ பதிவு!

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடிச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் 'eMigrate' [https://emigrate.gov.in]  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். இதுவே பாதுகாப்பான பயணத்திற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும்.

24
முக்கிய ஆவணங்கள்: உறுதிப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு

எந்த நிறுவனத்தில் அல்லது முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்துகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்குச் செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்குச் சென்ற நிறுவனம் அல்லது முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ அல்லது முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

34
சட்டவிரோதப் பயணத்தின் அபாயங்கள்: எச்சரிக்கை!

அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கே இட்டுச்செல்லும். எனவே, குறுக்கு வழிகளைத் தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

44
உதவி மற்றும் வழிகாட்டுதல்: தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை

வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இந்தியாவிலிருந்து அழைப்பிற்கு: 1800 309 3793. தவறவிட்ட அழைப்பிற்கு: 080 6900 9900 அல்லது 080 6900 9901. மின்னஞ்சல் முகவரிகள்: nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in. மேலும் தகவல்களுக்கு: [https://nrtamils.tn.gov.in](https://nrtamils.tn.gov.in). இந்த அறிவுரைகள் திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories