ரூபாய் நோட்டு கிழிஞ்சிடுச்சா..? எங்க மாத்தணும்.. எப்படி மாத்தணும்.. வழிகள் இதோ!

First Published Sep 4, 2024, 11:19 PM IST

உங்களிடம் பழையதாகிப்போன அல்லது கிழிந்துபோய் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா..? அவற்றை எளிதாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 

நம்ம கிட்ட ஏதாவது பொருட்கள் பழையதாகி போனால் குப்பை எடுத்து செல்பவர்களிடம் கொடுத்து விடுவோம். கொஞ்சம் பணம் கிடைக்கும். இல்லையென்றால் நமக்கு தெரிந்த ஏதாவது ஒருவருக்கு கொடுத்து விடுவோம். கடைசியாக உணவுப் பொருட்கள் கெட்டுப் போனாலும், அதை வீணாக தூக்கி எறிய விரும்புவதில்லை. பிச்சைக்காரர்களுக்கோ அல்லது நாய்களுக்கோ போட்டு விடுவோம். அப்படியிருக்கையில் நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் பழையதாகி போனால், கிழிந்து போனால்..? பழைய பொருட்களைப் போல விற்க முடியாது. அதேபோல் உணவுப் பொருட்களைப் போல யாருக்காவது கொடுக்கவும் மனம் சம்மதிக்காது. அந்த ரூபாயை என்ன செய்வது? எப்படி மாற்றுவது? என்பது தெரியாமல் பலரும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகவே இந்த தகவல்.

செல்லாத கரன்சி நோட்டுகளை எப்படி மாற்றுவது

சாலையோரங்களில் சிறிய கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, தெரு வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்குவது முதல் பெரிய பெரிய மால்களில் ஷாப்பிங், ஹோட்டல்களில் பில் செலுத்துவது, இப்படி அன்றாட வாழ்வில் பல இடங்களில் பணம் செலுத்துகிறோம். இது போன்ற சமயங்களில் ஒரு சில நேரங்களில் நமக்கு ஒரு வார்த்தை கேட்கும்... இந்த நோட்டு செல்லாது? என்று.

மிகவும் பழையதாகி விட்டாலோ, கிழிந்து போனாலோ, சிறிது எரிந்து போனாலோ... இந்த ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்க மாட்டார்கள். ஏன் நாம் கூட யாராவது இது போன்ற நோட்டுகளை கொடுத்தால் வாங்குவதில்லை... அப்படியிருக்கையில் மற்றவர்கள் எப்படி வாங்குவார்கள்.

பத்து, இருபது ரூபாய் என்றால் பரவாயில்லை... நூறு, இருநூறு, ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றால் கவலைதான். எப்படியாவது மாற்றிட வேண்டும் என்று முயற்சிப்போம். கிழிந்த நோட்டுகளை பசை கொண்டோ, பிளாஸ்டர் கொண்டோ ஒட்ட வைக்க முயற்சிப்போம்.

ஆனால் இப்படி கஷ்டப்படாமலேயே நம்மிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தால் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அருகில் இருக்கும் எந்த வங்கிக்கு சென்றாலும் செல்லாத நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் இதுபோல ரூபாயை மாற்றிக் கொள்ளலாம். இப்படி ரூபாய் நோட்டுகளோடு போராடாமல் மிகவும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

எப்படி நம் கையில் வந்தது என்று தெரியாது, ஆனால் செலவு செய்ய முடியாமல் இருக்கும் சில ரூபாய் நோட்டுகள். அவற்றை எந்த கடையிலும் வாங்க மாட்டார்கள். அதே நேரத்தில் தூக்கி எறியவும் மனம் வராது. அப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகளில் எவற்றை மாற்றிக் கொள்ளலாம், எவற்றை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Latest Videos


மாற்றிக் கொள்ளக்கூடிய ரூபாய் நோட்டுகள்

சாயில்டு நோட்ஸ் என்றால் மிகவும் பழையதாகிப் போன ரூபாய் நோட்டுகள் என்று அர்த்தம். அச்சிடப்பட்டு பல நாட்கள் ஆகியும், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வைத்திருந்தாலும், நனைந்து போனாலும் ரூபாய் நோட்டுகள் பழையதாகி விடும். சில நேரங்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கைகள் மாறினாலும் நோட்டுகள் சேதமடையும்.

இப்படி பல்வேறு காரணங்களால் நோட்டுகள் பழையதாகி விடுகின்றன. இது போன்ற நோட்டுகள் ஆங்காங்கே கிழிந்தும், சில இடங்களில் நிறம் மங்கியும் காணப்படும். ஒரு சில மிகவும் பழையதாகி மாறி இரண்டு துண்டுகளாகவும் கிழிந்துவிடும். . இது போன்ற ரூபாய்நோட்டுகளை சாயில்டு நோட்ஸ் என்பார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் நோட்டு முழுவதும் பழையதாகிப் போனாலும் அதில் இருக்கும் எண்கள் மறைந்து போகக் கூடாது. அதேபோல் கிழிசல் எண்களின் மீது இருக்கக் கூடாது. பழையதாகி போனாலும், கிழிந்து போனாலும் முழு நோட்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

இரண்டிற்கும் மேற்பட்ட துண்டுகளாக இருக்கும் நோட்டுகளை கிழிந்த நோட்டுகள் என்பார்கள். இது போன்ற நோட்டுகளில் இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, காந்தி படம் போன்ற முக்கியமானவை இல்லாமல் போனாலும் நோட்டை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கிழிந்த துண்டுகள் அனைத்தும் ஒரே நோட்டாக இருக்க வேண்டும்.

பல நாட்கள் வைத்திருப்பதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிப்போன, எரிந்த ரூபாய் நோட்டுகளையும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அசல் தோற்றமே தெரியாமல் சிறிய துண்டு மட்டும் இருந்தால் மாற்றிக் கொள்ள முடியாது. முழு நோட்டும் இருந்து சிறிது சேதமடைந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

எந்த மாதிரியான நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது

பழையதாகிப் போன நோட்டுகளை ஆய்வு செய்துவிட்டு அவற்றை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை வங்கி ஊழியர்கள் முடிவு செய்வார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரி ஒரு முறை ரூபாய் நோட்டில் PAY/PAID அல்லது REJECT என்ற முத்திரைகளை குறிப்பிடுவார்கள்.

இப்படிPay Paid ஸ்டாம்ப் போட்டார்கள் என்றால் இந்த நோட்டுக்கு ஏற்கனவே பணம் செலுத்தி விட்டார்கள் என்று அர்த்தம். ரிஜெக்ட் செய்தால் இந்த நோட்டு பணம் செலுத்த தகுதியற்றது என்று அர்த்தம். இப்படி முத்திரை குத்தப்பட்ட நோட்டுகளை எந்த வங்கியிலும் வாங்க மாட்டார்கள்.

முழுவதுமாக கிழிந்து போய் எந்த துண்டு எந்த நோட்டு என்று தெரியாத அளவுக்கு இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளோ, ரிசர்வ் வங்கி கிளைகளோ ஏற்றுக் கொள்ளாது. அதாவது அந்த ரூபாய் நோட்டு எதுவென்று முழுமையாக தெரிய வேண்டும்.

ரூபாய் நோட்டில் இருக்கும் எண்கள் அழிந்து போனாலோ, வண்ணம் பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போனாலோ நிராகரிக்கப்படும். முக்கியமாக ரூபாய் நோட்டு துண்டுகள் அனைத்தும் இருக்க வேண்டும்... அவற்றை ஒன்றாக சேர்த்தால் முழு நோட்டும் வர வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி ரூபாய் நோட்டுகளில் எந்த விதமான வாசகங்களோ, மத ரீதியான வாசகங்களோ எழுதக் கூடாது. அதாவது நோட்டில் காலியாக இருக்கும் இடங்களில் எந்த எழுத்தையும் எழுதக் கூடாது. அது போன்ற நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளும்... ஆனால் அவற்றை புழக்கத்தில் இருந்து நீக்கி விடும்.

செல்லாத ரூபாய் நோட்டுகளை இப்படியும் மாற்றிக் கொள்ளுங்கள்

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இயங்கும் எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம். வங்கி நேரத்தில் கிழிந்த, பழைய நோட்டுகளை எடுத்துச் சென்று கொடுத்தால் போதும், அவற்றை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளை வழங்குவார்கள். இதற்காக எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை... எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒரு நபர் 5000 ரூபாய் மதிப்புக்கு மேல் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கரன்சி செஸ்ட் கிளையை அணுக வேண்டும். அதற்கும் குறைவான மதிப்புள்ள 5 நோட்டுகள் வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

எனவே வெளியில் கமிஷன் வாங்கிக் கொண்டு கிழிந்த நோட்டுகளை வாங்கி புதிய நோட்டுகளை தருபவர்களிடம் ஏமாற வேண்டாம். செல்லாத ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று தெரிந்து விட்டது, எனவே வங்கிகளை அணுகுங்கள். ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி ஒவ்வொரு வங்கியும் செல்லாத நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது. ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டால் வங்கி உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

click me!