Vodafone Idea shares
மத்திய அரசின் ஒரு முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று பங்குச் சந்தை ஆரம்பத்தில் வோடஃபோன் ஐடியா (VI) பங்குகள் சுமார் 10% உயர்ந்தன. நெருக்கடியான நிலையில் தவிக்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவுக்கு இந்த அறிவிப்பு சாதகமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் அதன் பங்குகள் உயர்வு கண்டன.
Vodafone Idea dues into equity
வோடஃபோன் ஐடியா நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.10 என்ற விலையில் 3,695 கோடி பங்குகளை வெளியிட உள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள ரூ.36,950 கோடி கடன், பங்குகளாக மாற்றப்படும். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசிற்கு வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் உள்ள பங்கு 22.6% இலிருந்து 48.99% ஆக அதிகரிக்கிறது.
Vodafone Idea Statement
வோடஃபோன் ஐடியா வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 90 வர்த்தக நாட்கள் அல்லது பிப்ரவரி 26, 2025 க்கு முந்தைய 10 நாட்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, நிறுவனங்கள் சட்டம், 2013 இன் விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.
Vodafone Idea relief
இரண்டாவது முறையாக அரசு வோடஃபோன் ஐடியாவின் கடனை ஈக்விட்டியாக மாற்றியுள்ளது. 2023ல், ஒரு பங்குக்கு ரூ.10 என்ற விலையில் ரூ.16,133 கோடி கடன் ஈக்விட்டியாக மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், வோடஃபோன் ஐடியாவின் உடனடி நிதிச் சுமை குறையும் எனினும், நிறுவனத்துக்கு 4G மற்றும் 5G சேவைகளை விரிவுபடுத்த நிதி திரட்டுவதில் சிக்கல்கள் இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
City Research on Vodafone Idea
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக, சர்வதேச தரகு நிறுவனமான சிட்டி ரிசர்ச், வோடஃபோன் ஐடியாவின் பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பங்குகளை வாங்குவதற்கான இலக்கு விலையை ரூ.12 என நிர்ணயித்துள்ளது. இது முந்தைய வர்த்தக நாளின் இறுதி விலையிலிருந்து 76% அதிகம்.
Motilal Oswal on Vodafone Idea
அதேபோல், மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம், வோடஃபோன் ஐடியாவின் பங்குகளுக்கான இலக்கு விலையை ரூ.5 முதல் ரூ.6.5 ஆக உயர்த்தியுள்ளது. இது தற்போதைய வர்த்தக விலையைவிடக் குறைவாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் வோடஃபோன் ஐடியா பங்கு 10% உயர்வுடன் ரூ.7.48க்கு வர்த்தகமானது. கடந்த 52 வாரங்களில், வோடஃபோன் ஐடியா பங்குகளின் அதிகபட்ச விலை ரூ.19.18 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.6.61 ஆகவும் பதிவாகியுள்ளது.