இனி சிலிண்டர் தேவையில்லை.. கேஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த 4 லட்சம் இந்தியர்கள்.. என்ன நடந்தது?

Published : Apr 10, 2026, 06:54 PM IST

இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, உள்நாட்டு நுகர்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு, அவற்றின் தேவையில் சுமார் 80 சதவீதம் எரிவாயு வழங்கப்படுகிறது.

PREV
14
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

மேற்கு ஆசியாவில் நடந்து வந்த போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் சமையல் எரிபொருள் விநியோகத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, சமையல் எரிவாயுவான LPG-க்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அரசு ஒரு மாற்று திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான நுகர்வோர்கள், குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவான PNG (Piped Natural Gas) இணைப்புக்கு மாறியுள்ளனர்.

24
வீடுகளுக்கு தடையில்லா எரிபொருள்

சமீபத்திய நிலவரங்கள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு கூட்டத்தில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, "LPG மீதான அழுத்தத்தைக் குறைப்பதும், வீடுகளுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசின் முக்கிய நோக்கம்" என்று குறிப்பிட்டார்.

"கடந்த ஐந்து வாரங்களில் மட்டும், சுமார் 4.05 லட்சம் புதிய LPG இணைப்புகள் PNG-க்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், 4.41 லட்சம் புதிய நுகர்வோர்கள் PNG இணைப்புக்காக பதிவு செய்துள்ளனர். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் தொடர் ஆதரவுடன், PNG நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணி மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

34
70% நிலைமை சீரானது

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், இந்தியாவுக்கு வரும் எரிபொருள் விநியோகத்தில் சில சவால்கள் நீடித்து வருகின்றன. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் LPG விநியோகஸ்தர்களிடம் போதுமான இருப்பு உள்ளதாகவும், எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக பாதிக்கப்பட்டிருந்த வர்த்தக ரீதியான LPG சிலிண்டர் விநியோகம், தற்போது சுமார் 70 சதவீதம் அளவுக்கு சீரடைந்துள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதிக தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் போன்ற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

5 கிலோ LPG சிலிண்டர்கள்

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவும் வகையில், 5 கிலோ LPG சிலிண்டர்களின் விநியோகம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. "5 கிலோ சிலிண்டர்களைப் பெறுவதற்கான ஆவணத் தேவைகளை எளிதாக்கி, அதன் விநியோகத்தை கணிசமாக அதிகரித்துள்ளோம். இதன் விளைவாக, தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிலிண்டர்கள் விற்பனையாகின்றன" என்று சுஜாதா ஷர்மா மேலும் தெரிவித்தார்.

மார்ச் 14 முதல், இந்தியாவில் சுமார் 1,06,000 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது. தினசரி நுகர்வு 6,000 முதல் 6,500 டன்னாக சீராக உள்ளது. இது தவிர, கடந்த வாரத்தில் மட்டும் 2,400-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு இருக்கும் மாற்று வழிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

44
கச்சா எண்ணெய் கையிருப்பு

இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, உள்நாட்டு நுகர்வுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு, அவற்றின் தேவையில் சுமார் 80 சதவீதம் எரிவாயு வழங்கப்படுகிறது. உரத் துறைக்கான விநியோகம் 95 சதவீத அளவுக்கு மீட்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சுகாதாரத் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு தடையின்றி எரிவாயு வழங்குமாறு நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும், சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு LPG உற்பத்தி அதிகரித்துள்ளதால், தற்போது நாட்டின் தேவையில் சுமார் 60 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே பூர்த்தி செய்கிறது. இதற்கிடையில், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மருந்து மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு தினமும் சுமார் 800 டன் பெட்ரோலியப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories