மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், இந்தியாவுக்கு வரும் எரிபொருள் விநியோகத்தில் சில சவால்கள் நீடித்து வருகின்றன. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் LPG விநியோகஸ்தர்களிடம் போதுமான இருப்பு உள்ளதாகவும், எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக பாதிக்கப்பட்டிருந்த வர்த்தக ரீதியான LPG சிலிண்டர் விநியோகம், தற்போது சுமார் 70 சதவீதம் அளவுக்கு சீரடைந்துள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதிக தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் போன்ற முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
5 கிலோ LPG சிலிண்டர்கள்
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவும் வகையில், 5 கிலோ LPG சிலிண்டர்களின் விநியோகம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. "5 கிலோ சிலிண்டர்களைப் பெறுவதற்கான ஆவணத் தேவைகளை எளிதாக்கி, அதன் விநியோகத்தை கணிசமாக அதிகரித்துள்ளோம். இதன் விளைவாக, தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிலிண்டர்கள் விற்பனையாகின்றன" என்று சுஜாதா ஷர்மா மேலும் தெரிவித்தார்.
மார்ச் 14 முதல், இந்தியாவில் சுமார் 1,06,000 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது. தினசரி நுகர்வு 6,000 முதல் 6,500 டன்னாக சீராக உள்ளது. இது தவிர, கடந்த வாரத்தில் மட்டும் 2,400-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு இருக்கும் மாற்று வழிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.