
விலை அதிகமாக இருந்தாலும் தங்க நகை வாங்கும் போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். இது ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருந்தும். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அடித்தட்டு மக்கள் தங்கம் வாங்குவது மிகவும் சிரமமான காரியமாக மாறியுள்ளது. தங்கம் விலை தினசரி உயர்ந்து கொண்டே இருப்பதால், ஒரு சவரன் நகை வாங்குவதற்கு இரண்டு மாத சம்பளம் தேவைப்படுகிறது. இதில் தங்கத்தின் விலை மட்டுமல்லாது, செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி போன்ற கட்டணங்களும் சேர்க்கப்படுகின்றன. இத்தனை பெரிய தொகையை செலவழித்து வாங்கும் நகை உண்மையில் தரமானதா? என்ற கேள்வி மிக முக்கியமானதாகவே உள்ளது.
பயன்பாட்டில் பார்க்கும் போது, நகைகளை அடகு வைக்க எடுத்துச் செல்லும் தருணத்தில் தான் நகையின் தரம் குறித்த உண்மை வெளிவரும். சில நேரங்களில், நகையின் தூய்மை குறைவாக இருக்கலாம் அல்லது அது ஹால்மார்க் செய்யப்படாமலும் இருக்கலாம். இதனால் நகை வாங்கும் முன்பே அதன் தரத்தை உறுதி செய்வது மிகவும் அவசியம். நகையின் தரம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் ஆப் பொது மக்களுக்கு உதவி செய்கிறது. அதனை பயன்படுத்தி நகையின் தரத்தை பரிசோதனை செய்து குவாலிட்டியான தங்கத்தை வாங்கி மகிழலாம்.
தங்கத்தின் தரத்தை தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காக மத்திய அரசு வழங்கும் முக்கியமான டிஜிட்டல் சேவையாக BIS Care App உள்ளது. இது Bureau of Indian Standards (BIS) அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை Android மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் https://www.bis.gov.in/bis-apps/ என்ற இணையதளத்தில் இருந்து அல்லது Play Store/Apple Store வழியாகப் பெறலாம்.
இந்த ஆப்பில் உள்ள “Verify HUID” என்ற விருப்பத்தினைத் தேர்வு செய்து, உங்கள் நகையில் குறிப்பிடப்பட்ட 6 இலக்க HUID (Hallmark Unique Identification) எண்ணை உள்ளிட வேண்டும். இந்த எண்ணை இடும்போது நீங்கள் வாங்கும் நகையின் விவரங்கள் தெரிய வரும். அதில், தங்கத்தின் தூய்மை நிலை – 22K, 24K அல்லது 18K போன்ற தகவல்கள் உறுதியாகக் கிடைக்கும். மேலும் விற்பனையாளர் விவரம், எந்த அங்கீகாரம் பெற்ற நகை கடை இந்த நகையை விற்றது என்பதும் தெரிய வரும்.
ஹால்மார்க் எப்போது பதிக்கப்பட்டது என்ற தேதியுடன் கூடிய தகவல் தெரியவரும். நீங்கள் வாங்கிய நகை அந்த நகை எந்த வகை அதாவது, மோதிரமா, சங்கிலியா, காதணியா என்ற தகவலையும் பெறலாம். மேலும் எங்கு ஹால்மார்க் செய்யப்பட்டது என்பதையும் அறிய முடியும்.இந்த தகவல்களும் நீங்கள் வாங்கிய நகை தொடர்பான விபரங்களோடு ஒத்துப் போனால், அது தரமானதுதான் என்பதை உறுதிசெய்யலாம். இல்லையெனில், அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் நீங்கள் உடனடியாக அதைப் பற்றி புகார் அளிக்க முடியும்.
நீங்கள் வாங்கிய நகை போலியானது என்ற சந்தேகம் இருந்தால், BIS Care App வழியாகவே உங்களது புகாரை பதிவு செய்யலாம். மேலும், BIS இணையதளம், helpdesk அல்லது தொலைபேசி வழியாகவும் நுகர்வோர் முறையீடு செய்ய முடியும். இது போன்ற தன்னிச்சையான பாதுகாப்பு முறைகள் தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் வழியை நமக்கு வழங்குகின்றன.
தங்கம் ஒரு மதிப்புமிக்க முதலீடு மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்த ஒரு உணர்ச்சி சார்ந்த சொத்தாகும். எனவே அதை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். நகையின் தரத்தை உறுதி செய்யும் BIS Care App போன்ற டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி, நம்முடைய முதலீட்டை பாதுகாக்கலாம்.இந்த வகையான தகவல் விழிப்புணர்வு அதிகமானால், தங்க நகை வியாபாரத்தில் நேர்மை அதிகரிக்கும், நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படும். இது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக பாதுகாப்பான நுகர்வுப் பொருள் சந்தையை உருவாக்கும் சிறந்த முயற்சி என்று கூறலாம்.