EPFO Interest: கோடிக்கணக்கான இபிஎப்ஓ உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான 8.25% இபிஎப் வட்டி ஜூலை 15 முதல் உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி தொகை விரைவில் உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாவது, புதிய மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பு செயல்பாட்டுக்கு வந்திருப்பதால், இந்த ஆண்டு வட்டி வரவு முந்தைய ஆண்டுகளை விட வேகமாக நடைபெறும். இதனால், உறுப்பினர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
25
வருங்கால வைப்பு நிதி
இந்த நிதியாண்டிற்கும் வருங்கால வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான பரிந்துரையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர் குழு தொடர்ந்து வழங்கியது, மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டித் தொகையை வரவு வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் வட்டி தொகை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரவு வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாத உறுப்பினர்களின் கணக்கில் வட்டி விவரங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
35
இருப்புத் தொகை
புதிய மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பு அறிமுகமானதன் மூலம் உறுப்பினர்களுக்கு பல புதிய வசதிகள் கிடைக்கின்றன. ஆதார் மற்றும் இதர விவரங்களை முழுமையாக உறுதிப்படுத்திய உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் வரை முன்பண கோரிக்கைகள் தானாகவே செயல்படுத்தப்படும். வேலை மாறும்போது வருங்கால வைப்பு நிதி தொகை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு தானாக மாற்றப்படும். மேலும், விண்ணப்பங்களில் உள்ள குறைகள் முன்கூட்டியே கண்டறியப்படுவதால், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் வாய்ப்பு குறையும். சந்தேகங்களுக்கு இணையவழியிலேயே விளக்கம் அளிக்கும் வசதியுடன், வருங்கால வைப்பு நிதி இருப்பு, கோரிக்கையின் நிலை மற்றும் ஓய்வூதிய விவரங்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் கிடைக்கும் வட்டித் தொகை, அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆண்டு முழுவதும் இருந்த சராசரி இருப்பு மற்றும் மாதந்தோறும் செலுத்தப்பட்ட தொகையைப் பொறுத்து கணக்கிடப்படும். உதாரணமாக, ஒருவரின் கணக்கில் ஆண்டு முழுவதும் சராசரியாக ரூ.5 லட்சம் இருந்தால், 8.25 சதவீத வட்டி அடிப்படையில் சுமார் ரூ.41,250 வரை வட்டி கிடைக்கும். இருப்பினும், இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில் கிடைக்கும் வட்டி தொகை ஒவ்வொரு உறுப்பினரின் சேமிப்பு தொகை மற்றும் பங்களிப்பைப் பொறுத்து மாறுபடும்.
55
இபிஎப்ஓ வட்டி 2025-26
வட்டி தொகை வரவு செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம், கைப்பேசி செயலி மற்றும் பிற அதிகாரப்பூர்வ இணைய சேவைகள் மூலம் தங்களது கணக்கு விவரங்களை சரிபார்க்கலாம். அனைத்து உறுப்பினர்களின் கணக்குகளும் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்படாமல், படிப்படியாக தகவல்கள் சேர்க்கப்படலாம். எனவே, வட்டி விவரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் சரிபார்த்தால், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பார்க்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.