UPI பரிவர்த்தனையில் 95,000 மோசடிகள்! பணத்தை இழக்காமல் தப்பிக்க 10 ஆலோசனைகள்

First Published May 29, 2023, 12:51 PM IST

UPI செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது அதிக அளவில் மோசடிகள் நடக்கின்றன. இந்த மோசடிகளில் சிக்கி பணம் பறிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கும் வழிகளைப் பார்க்கலாம்.

கொரோனாவுக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிவேகமாக உயர்வு கண்டுள்ளன. இந்த பரிவர்த்தனைகள் நிறைய வசதிகளை வழங்கினாலும், பயனர்கள் கவனமாக இல்லாவிட்டால் சில ஆபத்துகளும் உள்ளன. அரசாங்கத் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 95,000-க்கும் அதிகமான UPI மோசடிகள் பதிவாகியுள்ளன.

இந்த மோசடிகள் எதுவும் எந்த UPI செயலியிலும் உள்ள பாதுகாப்பு குறைபாடு காரணமாக நிகழ்ந்தவை அல்ல என்பது கவனிக்க வேண்டியது ஆகும். UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் எந்தவொரு பயனரின் KYC விவரங்களையும் வெளிப்படுத்தாது. ஹேக்கிங் செய்வதற்கும் வழிவகுக்காது.

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் மக்களை ஏமாற்ற QR குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மோச வழக்குகளில், க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யபடும்போது, UPI பின் நம்பரை டைப் செய்யுமாறு கேட்கப்படுகிறது. அதன்படி யுபிஐ பின் நம்பரை உள்ளீடு செய்தால், பணம் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக, கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகிறது.

பணம் அனுப்பப்படும் நபரின் அடையாளத்தை மக்கள் சரிபார்க்க வேண்டும். பல சமயங்களில், UPI மூலம் பணம் கேட்கும் மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள் அல்லது உறவினர்கள் என்று கூறி பணம் பறிக்கின்றனர்.

கூகுளில் கஸ்டமர் கேர் எண்களைத் தேடும்போது கவனமாக இருக்கவேண்டும். இந்த வகையில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக போலி இணையதளங்கள் உருவாக்கி தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.

UPI பின் நம்பரை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். பலரும் இதைச் செய்யத் தவறுவதுதான் UPI மோசடிகளுக்கு மற்றொரு முக்கியக் காரணம். ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேர்டுகளைப் போலவே, இவற்றையும் அவ்வப்போது மாற்றுவது முக்கியம்.

முன்பின் அறிமுகம் ஆகாத நபர்களிடம் UPI பின் நம்பரைச் சொல்லக்கூடாது. UPI மோசடிகளுக்கு இது மற்றொரு பெரிய காரணம். பாஸ்வேர்டுகளைப் போலவே யுபிஐ பின் நம்பரையும் அந்நியர்களுடன் பகிரவே கூடாது.

UPI பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத பொது வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. பொது வைஃபையில் UPI பரிவர்த்தனை உள்பட எந்த ஆன்லைன் நிதி பரிவர்த்தனையைச் செய்வதும் ஆபத்தானது.

தெரியாத நபர்கள் அனுப்பிய இணைப்புகளைக் கிளிக் செய்வது, மின்னஞ்சல்களைத் திறப்பது ஆகியவையும் பிரச்சினையை ஏற்படுத்தலாம். சைபர் கிரைமினல்கள் மொபைலில் உள்ள தரவுகளைத் திருட இந்த வழியைப் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நம்பகமான ஆப் ஸ்டோரில் இல்லாத செயலிகளை டவுன்லோட் செய்யவோ இன்ஸ்டால் செய்யவோ கூடாது. Teamviewer, AnyDesk, Quickshare போன்ற செயலிகளை டவுன்லோட் செய்வதன் மூலம் மோசடி செய்பவர்கள் ஈ-வாலெட்களை கைப்பற்றுகிறார்கள்.

click me!