யார் இந்த அசீம்?... ரெட் கார்டு வாங்கியவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனது எப்படி? - அவர் கடந்து வந்த பாதை

First Published Jan 23, 2023, 12:38 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டிலையும் வென்றுள்ள அசீம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் தான். கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக வலம் வந்த அசீம் தான் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபி, ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

யார் இந்த அசீம்?

அசீம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆளூரை சேர்ந்தவர் ஆவார். விஜே ஆக வேண்டும் என்கிற கனவோடு சென்னை வந்த அசீம், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2008-ம் ஆண்டு தொகுப்பாளராக சேர்ந்தார். தன் தூய தமிழாலும், பேச்சுத்திறமையாலும் ரசிகர்களை ஈர்த்த அசீமுக்கு பின்னர் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சீரியலில் எண்ட்ரி கொடுத்தார் அசீம்.

இதையடுத்து பிரியமானவள், தெய்வம் தந்த வீடு போன்ற தொடர்களில் நடித்த அசீம், பகல் நிலவு சீரியல் மூலம் தான் மிகவும் பேமஸ் ஆனார். அந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசீம். அப்போது இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அசால்டாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தார் அசீம்.

குடும்பம்

அசீமுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர் சையத் சோயா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரயான் என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். 

அதேநேரம் இருவாரத்துக்கு ஒருமுறை மகனை சந்தித்துக் கொள்ள அசீமுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மகன் ரயான் மீது அதீத அன்பு கொண்டிருந்தார் அசீம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதே தன் மகனுக்காக தான் என்று அவர் கூறி இருந்தார். 

இதையும் படியுங்கள்... வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் விக்ரமன் பைனலில் தோற்றுப்போனது ஏன்? - வெளியான ஷாக்கிங் பின்னணி

பிக்பாஸ் வாய்ப்பு

அசீமுக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டாலும், அவருக்கு கடந்த சீசனிலேயே வாய்ப்பு கிடைத்தது. 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்வதற்காக குவாரண்டைனில் கூட இருந்தார் அசீம். ஆனால் அந்த சமயத்தில் அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக அந்த சீசனில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது.

5-வது சீசனில் நழுவவிட்ட வாய்ப்பை 6-வது சீசனில் கெட்டியாக பிடித்துக்கொண்டார் அசீம். இந்த முறை போட்டியாளராக கலந்துகொண்ட அவர், ஆரம்பத்தில் விளையாடிய முறை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. யாருக்கும் மதிப்பளிக்காமல், சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக பேசுவது, அதிகம் தற்பெருமை பேசுவது என இவர் செய்த செயல்கள் கமல்ஹாசனையே கடுப்பாக்கியது.

இதன் காரணமாக இரண்டு முறை அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவங்களும் இந்த சீசனில் நடந்தன. பின்னர் போகப்போக மற்ற போட்டியாளர்கள் பெரியளவில் சோபிக்காததால், அசீம் சண்டை போடுவதும் நன்றாக தான் உள்ளது என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதனால் அவருக்கு வாக்களித்து இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற அவர்கள், இறுதிப்போட்டியிலும் அவரை ஜெயிக்க வைத்துவிட்டனர். 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு

click me!