Electric Scooter: கடந்த 18 மாதங்களில் மட்டும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சாதனையின் பின்னால் எந்த மாடல் முக்கிய பங்கு வகித்தது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஏதர் எனர்ஜி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனம் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, இந்தியாவில் இந்த சாதனையை எட்டிய நான்காவது இவி இருசக்கர வாகன நிறுவனமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி தொழில்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
25
விற்பனை நிலவரம்
வாகன விற்பனை தரவுகளின்படி, ஜூன் 25, 2026 வரை ஏதர் எனர்ஜி-யின் மொத்த சில்லறை விற்பனை 7,04,447 யூனிட்டுகளை எட்டியுள்ளது. 2018-ல் விற்பனையை தொடங்கிய நிறுவனம், ஆரம்ப ஆண்டுகளில் மெதுவாக வளர்ந்தாலும், கடந்த 18 மாதங்களில் அபார முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 3.78 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.
35
ஏதர் ரிஸ்டா ஸ்கூட்டர்
இந்த அதிவேக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஏதர் ரிஸ்டா குடும்ப பயன்பாட்டு ஸ்கூட்டர் பார்க்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 54 சதவீத பங்களிப்பை இந்த மாடல் வழங்கியுள்ளது. அதேபோல் 450S, 450X மற்றும் 450 Apex மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்த உதவியுள்ளன.
2026-ம் ஆண்டிலும் ஏதர் தனது வளர்ச்சியை தொடர்கிறது. ஜனவரி முதல் ஜூன் 25 வரை மட்டும் 1,63,788 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மார்ச் 2026-ல் மட்டும் 36,362 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி, நிறுவன வரலாற்றில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாக பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் எட்டு முறை 20,000-க்கும் மேற்பட்ட மாதாந்திர விற்பனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.
55
சாதனை படைத்த ஏதர் எனர்ஜி
ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய ஏதர் எனர்ஜி, இந்திய இவி சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. புதிய தயாரிப்புகள், விரிவடையும் டீலர் வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனம் மேலும் பல புதிய விற்பனை சாதனைகளை படைக்கும் வாய்ப்பு இருப்பதாக வாகனத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.