
ஆன்மீக பூமியாக விளங்கும் தமிழகத்தில் ஏராளமான பழமையான கோவில்களும், சக்தி வாய்ந்த கோவில்களும் உள்ளன. இவற்றில் மிக முக்கியமான, சிறப்பு வாய்ந்த தலங்கள் சில உள்ளன. இவற்றிற்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் மிக முக்கியமான டாப் 10 கோவில்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்ட பலனை தரக் கூடிய தலம் திருச்செந்தூர். கடற்கரையில் அமைந்த ஒரே முருகன் கோவில் இது மட்டும் தான். சூரசம்ஹாரம் நடந்த தலம். முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு காட்சி தரும் தலம் என்பதால் இயற்கை சீற்றம், கடல் கொந்தளிப்பு, சுனாமி ஏற்படும் போது எல்லாம் கடல் உள் வாங்குமே தவிர, ஊருக்குள்ளோ அல்லது கரையில் உள்ள கோவிலுக்குள்ளே இதுவரை கடல்நீர் சென்றது கிடையாது.
திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இது, 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே ஒரு தீவு போல அமைந்திருக்கும் இந்த புனித தலம். இங்கு பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் (ரங்கநாதர்) காட்சி தருகிறார். இவருக்கு 'பெரிய பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
அனைத்து சக்தி பீடங்களிலும் சென்று வழிபட்ட பலனை தரும் தலம் சமயபுரம் மாரியம்மன் கோவில். பக்தர்களுக்காக அம்பாளே ஒரு மாத காலம் பட்டினியாக இருந்து விரதம் இருக்கும் ஒரே திருத்தலம் இது மட்டும் தான். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தலைமை ஆலயமாக விளங்கும் தலம். அநீதிகளையும், தீமைகளையும், நோய்களையும் அன்னை அழிப்பதாக பக்தர்களால் நம்பப்படும் தலம்.
பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் புண்ணிய திருத்தலமாக விளங்கிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். ஆன்மிக பூமி, சித்தர்கள் பூமி என போற்றப்படும் புண்ணிய தலம். இங்கு சிவனே மலை வடிவமாக காட்சி தருவதாக ஐதீகம். அண்ணாமலையாரை வழிப்பட்டு இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குன்றின் மீது இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. தணி' என்றால் தணிதல் அல்லது அமைதியாதல் என்று பொருள். சூரபத்மனை வதம் செய்த பிறகு, சினம் தணிந்து முருகன் இங்கு வந்து அமர்ந்ததால் இத்தலம் 'தணிகை' அல்லது திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. மற்ற படை வீடுகளில் முருகனைப் போர் கோலத்தில் பார்க்கலாம், ஆனால் இங்கு அவர் சினம் தணிந்து சாந்த சொரூபியாகக் காட்சி தருகிறார். முருகன் வள்ளியை மணமுடித்த தலம் இதுவே என்று நம்பப்படுகிறது. எனவே, திருமணத் தடை நீங்க இங்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய அம்மன் கோவில் இது தான். பெண் தெய்வத்தை முதன்மையாக கொண்ட ஒரே சிவன் கோவில் இது தான். இங்கு மீனாட்சி அம்மனின் திருமேனி பச்சை நிற மரகத கல்லால் ஆனதாக சொல்லப்படுகிறது. பக்தர்களின் குறையை தாயாக இருந்து தீர்த்து வைக்கும் தெய்வமாக அன்னை மீனாட்சி விளங்கும் தலம். வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழா நடக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சக்தி வாய்ந்த பெண் தெய்வ தலங்களில் ஒன்று. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில், அடர்ந்த வனப்பகுதியின் நுழைவாயிலில் பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாகக் கருதப்படுகிறார். மிகவும் சாந்தமான மற்றும் கருணை பொழியும் முகத்தோடு காட்சியளிப்பதால், மக்கள் இவரை 'பண்ணாரித் தாய்' என்று அன்போடு அழைக்கிறார்கள். பண்ணாரியின் மிக முக்கியமான நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழா ஆகும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம். மதுரை மாநகருக்கு மிக அருகிலேயே (சுமார் 8 கி.மீ) அமைந்துள்ள இந்தத் தலம், வரலாற்று ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயில் ஒரு பிரம்மாண்டமான பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். இதன் காரணமாகவே இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை, மாறாக புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. முருகப்பெருமானின் கையில் உள்ள 'வேல்' ஒன்றிற்கு மட்டுமே இங்கு அபிஷேகம் நடைபெறும். திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் 'சிக்கந்தர் பாபா தர்கா' அமைந்துள்ளது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே மலையில் தங்களது புனிதத் தலங்களைக் கொண்டிருப்பது மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
கொங்கு நாட்டின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் முருகப்பெருமானின் மிக முக்கியமான திருத்தலம். கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இந்தத் தலம் அமைந்துள்ளது. மருத மரங்கள் அதிக அளவில் நிறைந்த மலை என்பதால் இது 'மருதமலை' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் 'மருதாசலமூர்த்தி' அல்லது 'தண்டாயுதபாணி' என்று அழைக்கப்படுகிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த தலம் இது. மலையின் ஒரு பகுதியில் 'பாம்பாட்டி சித்தர் குகை' உள்ளது. இவருக்கு முருகன் பாம்பின் வடிவில் காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
பெரியபாளையம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் தான். இங்கு வீற்றிருக்கும் பவானி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறார். ஆதிசக்தியின் அம்சமாக கருதப்படும் இந்த அம்மன், கையில் சங்கு மற்றும் சக்கரத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெரியபாளையத்தில் ஆடித் திருவிழா மிகவும் பிரபலம். ஆடி மாதம் தொடங்கி தொடர்ந்து 10 முதல் 14 வாரங்கள் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இக்காலத்தில் இங்கு குவிவார்கள்.