ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தில நின்னாலும் ஜெயிக்கப்போறது நாங்க தான்!! தினகரன் நம்பிக்கை

By sathish kFirst Published Mar 21, 2019, 9:31 PM IST
Highlights

ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தில் நாங்க நின்றாலும் மாபெரும் வெற்றி எங்களுக்கு தான் என  தினகரன் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டன. அமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக தேர்தல் அலுவலகத்தை தினகரன் நேற்று துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் ஆணையமும் சரி,அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் சரி எந்த தடையை ஏற்படுத்தினாலும் எங்கள் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் ஆதரவால் நாங்கள் மாபெரும் வெற்றிபெறுவோம். அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் என பல்வேறு தடைகளைத் தாண்டி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றிபெற்றோம். திருவாரூக்கு தேர்தல் நடந்திருந்தால் அங்கும் வெற்றிபெற்றிருப்போம். எங்களுக்கு பயந்துதான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்பதால், தேர்தல் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்குமா? எனக் கேட்டதற்கு, வரும் மே மாதம் தமிழகத்தில் பெரும் புயல் வரக்கூடும் அல்லது ஏப்ரல் 18ஆம் தேதி பெரும் பூகம்பம் வரும்னு ஏதாவது வானிலை அறிக்கையை காரணம் காட்டி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம் எனக் கூறிய அவர் , குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் எந்த சின்னம் என்ற முடிவு தெரிந்துவிடும். அதற்கு அடுத்த நாள் நாங்கள் மனுதாக்கல் செய்வோம். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை அனால் நாங்கள் நீதிமன்றத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளோம். 

எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லையெனில்  ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னத்தில் நின்றால் கூட இவர் அமமுக வேட்பாளர் என்று மக்களுக்கு நல்லாவே தெரியும் அதனால நாங்க கண்டிப்பா ஜெயிப்போம்.

click me!