மகனைக் கொன்ற இளைஞரை ஓட..ஓட விரட்டி கொலை செய்த தந்தை.. பட்டப் பகலில் நடந்த கொடூரம்….

By Selvanayagam PFirst Published Sep 26, 2018, 11:16 PM IST
Highlights

மகனைக் கொன்ற இளைஞரை சினிமா  பாணியில் பழிக்குப்பழி வாங்கும் வகையில், பரபரப்பான ஹைதராபாத் சாலையில் ஓட, ஓட விரட்டி தந்தையும், மாமாவும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் கவுட். இவரும் ரமேஷ் கவுட் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் ரமேஷ் கவுடுக்கும், ரோஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

தனது நண்பனின் தோழி என்ற முறையில் ரோஜாவுடன் கேஷும் பேசியுள்ளார். இது ரமேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் ரோஜாவிடம் பேசக் கூடாது என  ரமேஷ் கண்டித்தும் மகேஷ் கேட்காமல் ரோஜாவுடன் பேசி வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது நண்பர்கள்  3 பேர் உதவியுடன் மகேஷை மலைப்பகுதி கோயிலுக்கு அழைத்துச் சென்று மது குடிக்கவைத்து கொலை செய்து எரித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்  மகேஷை கொலை செய்தது, அவரின் நண்பர் ரமேஷ் என்கிற விவரம் தெரிந்து. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே மகேஷை  கொலை செய்த ரமேஷை பழிவாங்குவதற்காக மகேஷின் தந்தை கிருஷ்ணா கவுடும், மாமா லட்சுமண் கவுடும் நீண்டநாட்களாகத் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனிடையே  இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரமேஷ் கவுடு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அட்டப்பூர் பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் ரமேஷ் வந்தபோது, அவரை மகேஷின் தந்தை கிருஷ்ணாவும், மாமா லட்சுமனும் கையில் அரிவாளுடன்  அவரை துரத்தி துரத்தி  வெட்டினர். ரத்த காயத்துடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ரமேஷ் தொடர்ந்து ஓடினார்.

ட்ராபிக் மிகுந்த சாலையில் ரமேஷால் ஓடமுடியாமல் கீழே விழுந்தார். அவரை விடாமல் துரத்திய கிருஷ்ணாவும், லட்சுமணும் பட்டப்பகலில் அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெற்றி, வெற்றி என சத்தமிட்டபடி இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

ஆனால் இந்த சம்பவத்தைப் பார்த்த யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் மொபைலில் படம் பிடித்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

click me!