குழந்தை தனது ஜாடையில் இல்லை என கணவன் வெறிச்செயல்... மனைவி 3 மாதக் குழந்தை கொடூரக் கொலை!

By manimegalai aFirst Published Sep 26, 2018, 3:02 PM IST
Highlights

மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தில் அவரையும், குழந்தை தனது ஜாடையில் இல்லை என 3 மாத பச்சிளங் குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவருக்கும் ஷீலா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைந்தது. இவர்களுக்கு ரத்தீஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ஷீலாவின் நடத்தை மீது ஆறுமுகசாமி சந்தேகம் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஷீலா இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். 

இதனைத் தொடர்ந்து ஷீலா, பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து, புதுக்குடியில் உள்ள கணவர் வீட்டுக்கு ஷீலா திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த ஷீலாவிடம், குழந்தை தனது ஜாடையில் இல்லை என்றும், குழந்தை தனக்கு பிறந்ததாக இருக்க முடியாது என்று சண்டை போட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆறுமுகசாமி, ஷீலாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். நேற்றும் அவர்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி, மனைவி ஷீலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மனைவியை வெட்டி கொலை செய்த பிறகும், ஆத்திரம் அடங்காத ஆறுமுகசாமி, 3 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த ஆறுமுகசாமி, தலைமறைவாகியுள்ளார். 

ஷீலா கொலை செய்யப்பட்டது பற்றி அருகில் இருந்தோர் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து கொலை நடந்ததற்கான ஆதாரங்களை திரட்டினர். கொலையாளி ஆறுமுகசாமியைப் பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

click me!