கஞ்சா மது போதையில் இருசக்கர வாகனம் ஏற்றி இளைஞர் கொலை: கிருஷ்ணகிரியில் கொடூரம்!

By Manikanda PrabuFirst Published Apr 28, 2024, 3:23 PM IST
Highlights

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா மது போதையில் இருசக்கர வாகனம் ஏற்றி இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி அருகே தின்னகழனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது வீட்டின் அருகே நேற்று இரவில் சுமார் 20 வயது உடைய மர்ம நபர்கள் ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனங்களுடன் கஞ்சா, மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது சின்னத்தம்பி அவர்களிடம் சென்று யார் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள்? இங்கிருந்து செல்லுங்கள் அதிகளவில் ஆடு மாடு திருடு போகிறது இங்கு இருக்கக் கூடாது என சொன்னதாக கூறப்படுகிறது. இதில் மது போதையிலிருந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த சமயம் சின்னத்தம்பியின் மகன் வெற்றி, சத்தம் கேட்டு வந்துள்ளார் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும் சின்னத்தம்பி, வெற்றியை அக்கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர் கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் மீண்டும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் உருட்டு கட்டை பாட்டிலுடன் வந்த மர்ம நபர்கள் சின்னத்தம்பி வீட்டில் சண்டை போட்டுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வெற்றியின் நண்பர் கார்த்திக் என்பவர் போன் செய்துள்ளார்.

அவரிடம் பேசிய வெற்றி, எங்களை தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர் அவர்களை மடக்கி பிடிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். கார்த்திக் செல்வதை கவனித்த அவரது தந்தை தேவராஜ் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது கஞ்சா மது போதையில் வந்த மர்ம நபர்கள் கார்த்திக் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றினர். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் கார்த்திக் உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கார்த்திக்கின் தந்தை தேவராஜை தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கோவையில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர் உயிரிழப்பு!

இதையடுத்து மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், உயிரிழந்த கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தேவராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இருந்த நபர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் ஆகி தற்போது இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!