ஆன்லைனில் வேறு வேறு பெயர்களில், பெண் டாக்டர்களிடம் கல்யாண ஆசை காட்டி, மோடி செய்த போலெ டாக்டர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகே திருச்சி போலீஸ் கைது செய்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பெண் டாக்டர் கீதா கணவனை இழந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் மறுமணத்துக்காகத் திருமணத் தகவல் வெப்சைட்டில் பதிவு செய்திருக்கிறார். திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரும் திருமணத் தகவல் வெப்சைட்டில் பதிவு செய்துள்ளார். ஆனால், தனது பெயரைக் குறிப்பிடாமல் விது என்ற பெயரில் பதிவு செய்திருக்கிறார் சக்கரவர்த்தி. கணவரால் கைவிடப்பட்ட பெண் டாக்டருக்கு வாழ்வு கொடுக்கத் தயார் என்று தனது விவரத்தில் கூறியிருந்ததால் அவரை திருச்சி பெண் டாக்டருக்குப் பிடித்துப் போனதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து இருவரும் செல்போன் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பின்னர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருச்சி பெண் டாக்டரை சக்கரவர்த்தி ஏமாற்றி வந்துள்ளார். ஒருநாள் திருவண்ணாமலையில் உள்ள சக்கரவர்த்தி வீட்டுக்கு, திருச்சி பெண் டாக்டர் சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் கடிதம் இருந்துள்ளது. அந்தக் கடிதம் தொடர்பாக விசாரித்தபோதுதான் திருமணத் தகவல் வெப்சைட்டில் பதிவு செய்து பல பெண்களை சக்கரவர்த்தி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, தனது பெயரை விஜயகுமார், விது, சரவணன், அஜய், விஜய், என பல பெயர்களில் திருமணத் தகவல் வெப்சைட்டில் பல கணக்குகளை தொடங்கி பெண்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார். குறிப்பாகக் கணவனை இழந்த பெண் டாக்டர்களுக்கு, குழந்தை இருந்தாலும் வாழ்க்கை தரத் தயார் என அவரது கணக்கில் குறிப்பிட்டிருந்ததால் பல பெண்கள் அவரது வலையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாகப் பெண் டாக்டர்கள். பெண் டாக்டர்களை திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து வந்ததும் , லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் 6 கோடி ரூபாய் வரை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பெண் டாக்டர் லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக்கரவர்த்தியிடம் ரூ.18 லட்சம் வரை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கத் தாமதமானதால் அந்தப் பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி மற்றும் நிஷா பானு அமர்வு, சக்கரவர்த்தியைக் கைது செய்யாவிட்டால், திருச்சி எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று கண்டித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சக்கரவர்த்தி மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.