சென்னையில் பூங்கா ஒன்றில் வாட்ச்மேனாக பணியுரியும் ஒருவர் கள்ளக்காதல் செய்வதை மனைவி தட்டிக் கேட்டபோது, சுப்ரீம் கோர்ட்டே கள்ளக் காதல் செய்யலாம் என கூறிவிட்டது, நீ என்ன என்னை கேட்பது ? என தெனாவெட்டாக பேசியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த ஜான் பால் ஃபிராங்க்ளின் என்பவர் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜான்பால் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த புஷ்பலதா கணவரை கண்டித்துள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டே கள்ளக் காதல் செய்யலாம் என கூறிவிட்டது, நீ என்ன என்னை கேட்பது ? என திமிராக பேசியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புஷ்பலதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் RDO விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட புஷ்பலதா எழுதிய கடிதத்தை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், தனது மகளை, கணவன் ஜான் பால், வேலைக்குச் செல்லும் போது தூக்கிக் கொண்டு சென்றதுடன், அவரது கள்ளக்காதலியிடமே குழந்தையை விட்டு விடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தனது கணவனுக்கு, அது தான் மகிழ்ச்சி என்றால், தான் இறந்த பிறகாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்றும் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்..