நடத்ததையில் சந்தேகம் !! மனைவியை மண் வெட்டியால் வெட்டிக் கொலை செய்த கொடூர கணவன் !!

By Selvanayagam PFirst Published Feb 1, 2019, 7:40 AM IST
Highlights

அந்தியூர் அருகே எப்போதும் செல் போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் ஆத்திரத்தில் அவரை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொம்மநாயக்கர். இவருடைய மனைவி பாப்பம்மாள். இவர்களுடைய மகன் தர்மன்  விவசாயி. அவருடைய மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலா குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் தர்மன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி–ரங்கம்மாள் தம்பதியின் மகளான விஜயசாந்தி என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். விஜயசாந்தி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.


தர்மனும், விஜயசாந்தியும் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரியகாளியூர் டேங்க் தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது விஜயசாந்திக்கு 11 மாதங்களே ஆன சுஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் அதிகநேரம் பேசி வந்துள்ளார்.


இதனால் கணவர் தர்மனுக்கு விஜயசாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே விஜயசாந்தியை அவர் கண்டித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாத விஜயசாந்தி, செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மன் வீட்டுக்கு வந்தார். அப்போது விஜயசாந்தி செல்போனில் பேசியபடி இருந்து உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மன் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து மனைவி விஜயசாந்தியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.


இதனால் ரத்தவெள்ளத்தில் விஜயசாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து தர்மன் தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு, காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் குழந்தையை தர்மன் தாய் பாப்பம்மாளிடம் விட்டுவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். ஆனால் வீட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற சம்பவம் குறித்து தாயாரிடம் கூறவில்லை.


இதற்கிடையில் நேற்று அதிகாலை ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தன்னுடைய 2–வது மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!