திருமணம் ஆகாமல் கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய டிரைவர் … கொடூரமாக கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்த கொடுமை !!

By Selvanayagam PFirst Published Aug 2, 2019, 7:59 AM IST
Highlights

தாராபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை தோண்டி எடுத்து எரித்த கொடூரம் நடந்துள்ளது.
 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற வீரமலை. ஓட்டல் தொழிலாளி. அவருடைய மகள் முத்தரசி . இவர், வேடசந்தூரை அடுத்த நவாமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவருடைய அக்காள் தமிழரசி. இவர், திருமணமாகி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆத்துக்கால்புதூரில் வசித்து வருகிறார்.

தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி முத்தரசி சென்று வந்தார். அப்போது ஆத்துக்கால்புதூரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் பரத்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென முத்தரசி மாயமானார்.

வேடசந்தூருக்கு சென்ற பரத், அங்கிருந்து முத்தரசியை அவருடைய பெற்றோருக்கு தெரியாமல் ஆத்துக்கால்புதூருக்கு கடத்தி வந்து விட்டார். அதன்பிறகு ஆத்துக்கால்புதூரில் தனியாக ஒரு வீடு எடுத்து முத்தரசியை குடிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தரசியின் அக்காள் தமிழரசி, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது தான் முத்தரசியை திருப்பூர் பரத் என்பவர் கடத்தி சென்று இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வேடசந்தூர் போலீசார் ஆத்துக்கால்புதூருக்கு சென்று அங்கு வீட்டில் இருந்த பரத்தை அழைத்து சென்று விசாரித்தனர்.

முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் பரத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முத்தரசியை கடத்தி வந்து கொலை செய்து விட்டதாக பரத் கூறிய தகவலை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பரத்தை போலீசார் கைது செய்தனர். 

வேடசந்தூரில் இருந்து முத்தரசியை திருமணம் செய்து கொள்வதற்காக பரத் கடத்தி வந்தார். ஆனால் சில நாட்களிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகு இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒருநாள் பரத், தனது வாகனத்தில் முத்தரசியை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பரத், முத்தரசியை பலமாக ஓங்கி அடித்ததாக தெரிகிறது. இதில் முத்தரசி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பரத் என்ன செய்வது என்று தெரியாமல், முத்தரசியை வாகனத்தில் தூக்கிப்போட்டு ஆத்துக்கால்புதூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டார்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் பரத் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், வாகனத்தில் இருந்த முத்தரசியை பார்த்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. முத்தரசி கொலை செய்யப்பட்டது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் உடலை புதைத்து விட்டனர்.

அதன்பிறகு வீராட்சிமங்கலத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை பரத்துக்கு திருமண நிச்சயம் செய்தனர். திருமண காரியம் நடக்கும் போது, வீட்டில் பிணம் புதைக்கப்பட்டிருப்பது, குடும்பத்திற்கு நல்லதல்ல என்று பரத்தின் பெற்றோர் கருதினர். இதனால் திருமணத்திற்கு முன்பு, முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து எரித்துவிட முடிவு செய்தனர்.

அதன்படி பரத்திடம் தங்களுடைய திட்டத்தை தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு பின்னால் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தரசியின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

பின்னர் அதனை அருகே உள்ள பொட்டல்காட்டிற்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். அதன் பிறகு எதுவுமே நடக்காதது போல பரத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இருந்து விட்டனர். இதுமட்டுமின்றி நிச்சயம் செய்த பெண்ணை, கடந்த வைகாசி மாதம் பரத்துக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பரத்தின் உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!