
பாளையங்கோட்டையில் பல்கலைக்கழக முன்னாள் பெண் ஊழியர் கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் ஹவுசிங் போர்டு காலனி எல்.ஜி. நகரைச் சேர்ந்த கோயில்பிச்சை மனைவி உஷா (42) . தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் மாணவிகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்து வந்தார். இவருக்கு நீனா, ரீனா என்று இரு மகள்கள் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து உஷாவின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்குவந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து உஷா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், உஷா கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேநேரத்தில் தாயாரின் உடல் அருகே இரு மகள்களும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் மூத்த மகள் நீனா தாய் உஷாவை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். பின்னர், நீனாவும், ரீனாவும் நீதிமன்றம் அனுமதி பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.