ஏமாந்தது ரூ.5 ஆயிரமாக இருந்தாலும் மீட்டுத்தர்றோம்.. பப்ஜி மதன் விவகாரத்தில் அதிரடி காட்டும் போலீஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 19, 2021, 11:10 AM IST
Highlights

பலருக்கும் உதவி புரிவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்களின் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதாக கூறி யூ-டியூப்பில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை போலீசார் நேற்று தருமபுரியில் கைது செய்தனர். அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மதனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல தன்னை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதாக காட்டிக் கொள்ளவும் பணம் கொடுத்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். தன்னுடைய வீடியோக்களை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக புகழ்ந்து பேசுவதற்காகவும், திட்டுவதற்காகவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெண்களுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதில் மதனின் முக்கியமான பெண் தோழி ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பலருக்கும் உதவி புரிவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்பட்டு பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மதனிடம் ஏமாந்தது 5 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் கூட புகார் அளிக்கப்படும் பட்சத்தில் கட்டாயம் மீட்டுக் கொடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். 

அதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட மதனின் மனைவியும், அவருடைய யூ-டியூப் சேனல் அட்மினுமான கிருத்திகா கொடுத்த தகவலின் படி 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மதனின் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 கோடியையும் போலீசார் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!