அமைச்சர் மகன் வீட்டில் கொள்ளை !! 50 பவுன் நகைகளை லவட்டிச் சென்ற மர்ம நபர்கள் !!

By Selvanayagam PFirst Published Apr 27, 2019, 6:47 AM IST
Highlights

திண்டுக்கல்லில், வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் மகன் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேசன் . இவர் திண்டுக்கல் மெண்டோன்சா காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர், குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருடைய வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். அடுத்த நாள் காலையில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அவர் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டியில் வசிக்கும் உறவினரான சரவணபாண்டியனுக்கு இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து திண்டுக்கல்லுக்கு வந்த அவர், வெங்கடேசனின் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவர் வெங்கடேசனிடம் தெரிவித்தார். பின்னர் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் சரவணபாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வெங்கடேசனின் வீட்டுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து  திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

click me!