சகுந்தலாதேவிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 5 வருடமாக கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.
மேலூர் அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணனே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்தவர் சேதுபதி. அவருடைய மகள் சகுந்தலாதேவி. இவருக்கும், அருகில் உள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சென்னகரம்பட்டியில் தனது தாயார் மற்றும் அண்ணன் சவுந்தரபாண்டியன் வீட்டில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று சகுந்தலாதேவி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் சௌந்தரபாண்டியன் என்பவர்தான் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலவளவு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சகுந்தலாதேவிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 5 வருடமாக கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சகுந்தலாதேவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். அதனை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்ப மானத்தைக் காக்க தங்கையை படுகொலை செய்தேன் என சௌந்தரபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கையை அவருடைய அண்ணனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.