சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்...! போலீசார் தாக்கியதில் ரவுடி உயிரிழந்ததாக புகார்

By Ajmal KhanFirst Published Sep 29, 2022, 9:46 AM IST
Highlights

அயனாவத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மீண்டும் லாக் அப் மரணம்

தமிழகத்தில் லாக் அப் மரணம் தொடர்பாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் ஏரங்கிபுரம் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் சி பிரிவு ரவுடி என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.  இவர்மீது கொலை, கொள்ளை என 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது கார் கண்ணாடியை உடைத்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஓட்டேரி போலீசார் ஆகாஷை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் விசாரணையின்போது காவல் நிலையத்தில் ஆகாஷ்  தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விசாரணை கைதி உயிரிழப்பு

கடந்த ஒரு வாரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகாஷ் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய போலீசார் தாக்கியதால் ஆகாஷ் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இதேபோல் கீழ்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும்அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

லாக்அப் மரணம்- போலீசார் மறுப்பு

இந்த குற்றச்சாட்டை மறுத்த போலீசார்  ஆகாஷ் மது போதையில் இருந்ததால் 21 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஆகாஷின் மூத்த சகோதரியை வரவழைத்து அன்றே வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  மது போதை அதிகமான உள்ள நபர்களையோ, உடல்நிலை பாதிக்கப்பட்ட நபர்களையோ காவல் நிலையத்தில் வைத்து இரவு நேரத்தில் விசாரிக்க கூடாது என உயர் அதிகாரிகள்  உத்தரவிட்ட அடிப்படையில் இரவு 11 மணி அளவில் அவருடைய சகோதரியிடம் ஆகாஷை ஒப்படைத்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதற்கான முழு ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாகவும் ஓட்டேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் உடற்கூராய்வு முடிந்த பிறகே ஆகாஷின் மரணம் தொடர்பான உண்மையான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

கணவனை வெட்டி கொன்ற மனைவி... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

click me!