யாரையாவது உயர்பலி கொடுங்க.. 6 மாத குழந்தை நரபலி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி..

By Thanalakshmi VFirst Published Dec 18, 2021, 7:32 PM IST
Highlights

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாத குழந்தையை தண்ணீரில் முழ்கடித்து நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நசுருதீன். இவரது மனைவி சாலிகா. இவர்களுக்கு ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை ஹாஜரா தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவசர அவசரமாக சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ஹாஜரா நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் மூலம் தகவல் அப்பகுதியில் பரவியது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் காவலதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர். 

மேலும் முதற்கட்ட விசாரணையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து தொடர் விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டனர். உறவினர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் குழந்தை ஹாஜராவை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையின் தகப்பனார் நசுருதீனின் சித்தப்பாவான 52 வயதான அசாருதீன் என்பவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவரை அசாருதீன், அவரது மனைவி சர்மிளா சந்தித்துள்ளனர். அதில் உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உயிர்பலி கொடுத்தால் சரியாகிவிடும் என்று கேரள மந்திரவாதி முகமது சலீம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை நம்பி கடந்த சில தினங்களுக்கு முன் அசாருதீன் சேவல்களை பலி கொடுத்துள்ளனர். ஆனாலும், பிரச்சினை தீரவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மறுபடியும் கேரள மந்திரவாதியை சந்தித்துள்ளனர. அப்போது முகமது சலீம் வீட்டில் உள்ள யாரையாவது நரபலி கொடுத்தால் பிரச்சினை சரியாகி விடும் என்றும், அதனையும் உடனடியாக செய்ய வேண்டும் என சொன்னதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் குழந்தை ஹாஜராவை கொன்றால் தான் பிரச்சினை தீரும் என நினைத்த சர்மிளா, புதன்கிழமை இரவு குழந்தை ஹாஜரா தனது தந்தை நசுருதீன், தாய் சாலிகா ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்த போது யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மந்திரவாதியின் தவறான அறிவுரை காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

click me!